பக்கம் எண் :

394கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7

இயல் - 72

மாவலி சொல்லால் மாறிய கோளரி
போர்வலி காட்டப் புறப்பட் டேகினன்.

படைத்துணைவன் மாவலியன் சூடு தோன்றப்
      பகர்ந்தவெலாம் செவிபுகுதத் தளர்வு நீங்கி,
விடைக்களிற்றின் அனையானோர் முழக்கஞ் செய்தான்;
      ‘வெம்பகைக்குப் பணிந்திடுமோ வீரத் தோள்கள்!
படைக்கலங்கள் மோதட்டும்; போர்க்க ளத்தில்
      பகைவருடல் வீழட்டும்; பார்த்த லத்தில்
முடைக்குருதி ஓடட்டும்;’ எனப்ப கர்ந்து
      முறுவலன்பல் நறநறெனக் கடித்து நின்றான்.326

‘நாவலத்துக் கோளரியின் வீரம் வாழ்க!
      நமைக்காக்கும் பெருங்கனகன் கொற்றம் வாழ்க!
மேவலர்க்குப் பணியாத திண்டோள் வாழ்க!
      மிடலுடைய மறவர்குலம் வாழ்க’ என்று
நாவகத்துப் பெருமுழக்கஞ் செய்து வீரர்
      நடைவகுத்துப் படைத்துணைவர் சூழச் சென்றார்;
காவகத்துக் கொடுவிலங்கின் கூட்ட மெல்லாம்
      கடுகிஒரு வழிநடந்த தென்னச் சென்றார்.327