இயல் - 74 வேழனை அழைத்து விரைவினில் வருகென ஆளினை மன்னன் அனுப்பினன் துடித்தே. முடங்கல்தரும் செய்திஎலாம் படிக்கக் கேட்டு முனிந்தெழுந்த மதலைக்கோ, எதிர்த்து வந்த அடங்கலரை ஒழிப்பதினி எவ்வா றென்றே அமைச்சர்படைத் தலைவரையும் வினவி நின்றான்; ‘மடங்கலினை நிகர்ப்பானை அடக்க வேண்டின் மாவேழன் ஒருவன்தான் தக்கான் என்றார்; தடங்கலின்றி வலிமைமிகு வேழன் இன்று தண்டலத்தில் உறைகின்றான்’ என்று சொன்னார்.332 மாமன்னன் தூதுவரை விரைந்து கூவி மாவேழற் கொணர்கஎனப் பணித்து நின்று, ‘கோமன்னன் நாவலத்தான் போர்தொ டுத்தான்; குமரனொரு சிறுமகனே தலைமை பூண்டான் நாமன்னும் வெண்கோட்டை பற்றிக் கொண்டான்; நல்வலிமைக் கோடனையும் சிறையில் வைத்தான்; ஏமன்னும் வில்லானுக் கெல்லாம் சொல்லி இப்பொழுதே கொணர்க’வென ஏவி விட்டான். 333
அடங்கலர் - பகைவர், மடங்கல் - சிங்கம், தண்டலம் - வேழன் ஊர். ஏ - அன்பு. |