பக்கம் எண் :

வீரகாவியம்403

இயல் - 78

விரைந்து வந்திலன் வேழன் என்றாங்கு
எரிந்து சிறைசெய ஏவினன் மன்னன்.

என்றுவரும் என்றுவரும் சென்ற வீரன்
      என்றேங்கும் மன்னவன்முன் வந்த தூதன்
நின்றரசன் தாள்பணிந்து ‘வேழன் இங்கு
      நேரலரைப் பொருதொழிக்கச் சீற்றங் கொண்டே
ஒன்றிவுளி மீதேறி வருகின் றா’னென்
      றுரைத்தமொழி கேட்டுளத்துச் சினந்த வேந்தன்
‘நன்றியிலன் என்சொல்லைப் புறக்க ணித்தோ
      நாள்கடந்து வருகின்றான் நாயிற் கீழோன்.345

மதித்திருப்பின் இத்துணைநாள் தாழ்த்தல் செய்யான்
      வாளொன்று கொண்டவனை வீழ்த்த போதும்
கொதித்திருக்கும் எனதுமன மாறா’ தென்றான்;
      கொற்றவன்றன் சொற்கேட்டுத் தூதன் றானும்
மதித்துரைக்கும் அமைச்சவையும், ஆயத் தாரும்,
      மற்றுள்ள குழுவினரும் வருந்தி நின்றார்;
எதிர்ப்பிருக்கும் இவ்வேளை மன்னன் சொன்ன
      இழிமொழிகள் கேட்டுளத்தில் வெறுப்புங் கொண்டார்.346

குன்றொத்த திண்டோளான் கவசம் பூண்ட
      கொலைவேலான் மாவேழன், வேந்தன் ஆட்சி
மன்றத்துட் பீடுநடை யோடு வந்து
      மன்னவனைப் பணிந்திறைஞ்சி நின்றான்; உள்ளம்
கன்றத்தன் சினங்காட்டி மதலைக் கோமான்
      ‘காலந்தாழ்த் திங்குவரும் இவனைக் கொண்டு
சென்றந்தக் கொட்டிலுக்குள் அடைக்க’ என்று
      திறமிக்க காவலனுக் காணை யிட்டான்.347


இவுளி - குதிரை