பக்கம் எண் :

404கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7

இயல் - 79

வேந்தன் சுடுசொல் வேழன் கேட்டதும்
காந்தும் மனத்தொடு கழறினன் வெகுண்டே.

காவலன்றன் ஆணைக்கங் கஞ்சி நின்ற
      காவலனும் சீயத்தை அணுகி வந்தான்;
மேவலர்தம் படைநடுக்கும் வேழன் சீறி
      வீரனுக்கோர் அறைகொடுக்க, ஐயோ என்று
நாவலற மெய்யதிர மயங்கி வீழ்ந்தான்;
      நாடாள்வோன் முகம்நோக்கிச் சூரன் சொல்வான்,
‘காவலனே! நாட்டுக்கோர் பழியாய் வந்தாய்!
      கருத்தில்லாய்! பொறுப்பில்லாய்! கடமை யில்லாய்!348

என்னுயிரும் மதியாமல் போரில் உன்னை
      எத்தனையோ முறைகாத்தேன்; அதற்கோ என்னைச்
சின்னவனைக் கொண்டவையில் இகழ்ச்சி செய்தாய்?
      செருக்கொண்டு சீறிவரும் பகைவ ருக்கு
முன்னணுக மாட்டாமல் அஞ்சிச் சாகும்
      மொய்ம்புடையோய்! வாய்மதமோ பேசு கின்றாய்?
உன்னையொரு கடுகளவும் அஞ்ச கில்லேன்;
      ஒருவருக்கும் அடிபணியேன்; வீரங் கொள்வேன்.349

நாட்டின்பால் கொண்ட தொரு வேட்கை யாலுன்
      நன்றியிலாச் செயலெல்லாம் பொறுத்து வந்தேன்;
மாட்டின்பால் கறக்காமல் பயனே நல்கும்
      மடியறுக்க முனைகின்றாய்! எனைநீ யாட்டும்
ஆட்டம்போல் அடங்கியுனக் காடி நின்றேன்;
      அஞ்சியன்று; தாய்நாடு போற்றும் ஆசை;
வாட்டும்போ தடங்குவதால் மன்னா! என்றன்
      வலிமைஎலாம் ஓர்ந்திலையோ? உணர்வாய் நாளை. 350


அடவி - காடு