பக்கம் எண் :

414கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7

புறம்போந்த இளவேலன் இன்னும் இங்குப்
      போதருதல் புரிகிலனே! என்னோ! என்று
மறந்தோய்ந்த மாமல்லன் தேடு கென்று
      வயவருக்குப் பணியிட்டான்; தேடிச் சென்றோர்
நிறம்பாய்ந்த பேரடியால் குருதி சிந்தி
      நெடும்பிணமாய்க் கிடந்தானைத் தூக்கி வந்தார்;
‘அறந்தேய்ந்து போனதுவோ? இருளில் யாரும்
      அறியாமற் கொலைசெய்த வஞ்சர் யாரோ?372

பழிநாணாச் செயல்செய்ய மூவ கத்துப்
      பாராள்வோன் ஏவியுளான்; இதற்கு நாளை
வழிகாணா தவனைவிடேன்; வஞ்ச நெஞ்சன்
      வாய்விட்டுக் கதறும்வரை அடித்துக் கொல்வேன்;
இழிவான செயல்செய்யத் துணிந்தான் பாவி!’
      எனமொழிந்தான் வெஞ்சினத்துக் காளை யன்னான்;
விழிகாணா தொளிந்தங்கு வந்த வேழன்
      விரைந்தேகித் தன்னரசன் பாடி சேர்ந்தான்.373


இன்னே - இப்பொழுதே. மாமல்லன் - மற்போர்வல்ல கோளரி. வயவர் - வீரர், நிறம் - மார்பு, குருதி - இரத்தம், பாடி - பாசறை.