இயல் - 85 மன்னவன்பால் கோளரியை வியந்து வேழன் மாற்றலனைப் புனைபெயரால் பொருவேன் என்றான். மீண்டுவரும் மாவேழன் பகைப்பு லத்தில் விளைந்தவெலாம் அரசனுக்கு விளம்பிப் பின்னர், ‘ஆண்டுவரும் மாமன்னா! வந்த ஏந்தல் அடலேறு படுநடையன், அழகன், வீரன்; ஆண்டவனைப் பொருவதெனில் அரிய ஒன்றே! ஆயினும்நம் அணித்தலைவர் பொருத பின்னர் வேண்டுமெனில் அமர்புரிய வருவேன் நானே; வேறுபுனை பெயரோடு பொருது வெல்வேன்.374 படைகொண்டு வந்தவனோர் இளைஞன்; அந்தப் பாலனொடு மாவேழன் பொருதல் நன்றோ? விடைவென்ற தோற்றத்தன் என்பேர் கேட்பின் வெலவெலத்துப் போராண்மை காட்டா தேகும்; நடைகொண்டான் அஞ்சுமெனில் அவனு ளத்தே நல்வீரம் அணுவளவும் தோன்றா தன்றோ? தடையின்றி அவன்திறமை முழுதுங் காட்டிச் சமர்செய்ய வேண்டுமென எண்ணங் கொண்டேன்.375 சிறுவீரன் பெருவீரங் காட்டிக் காட்டிச் செயிர்த்தெழுந்து புரிகின்ற கோல மெல்லாம் உறுபோரிற் கண்ணாரக் காணல் வேண்டும்; உள்ளமெலாங் களிகொண்டு பொங்க வேண்டும்; கறுவோடு பொருதவன்தன் ஆண்மை எல்லாம் காட்டியபின் நான்வெல்லும் ஆசை யாலே மறுபேரால் பொரநினைந்தேன்; மாற்றான் வீரம் மதிக்கின்ற பெருங்குணமும் வேண்டும் அன்றோ?’376
ஆண்டவனை - ஆண்டு + அவனை; ஆண்டு - அங்கே, விடை - காளை. செயிர்த்து - கோபித்து, கறு - கோபம். |