பக்கம் எண் :

106கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8

துறவுலகில் ஞானியார்? என்ற ஐயம்
       தோன்றிவரும் நாளிற்றான், சுரும்பு சூழும்
நறவுமலி பாதிரிசேர் புலியூர் தன்னில்
       நலம்பெருக்குஞ் செம்பொருளின் வளம்பெ ருக்கி
அறவுரைகள் நிறைதமிழின் சுவைபெ ருக்கி
       அவாவறுக்கும் ஞானியார்1 அமர்ந்தி ருந்தார்;
நிறைவுகொளும் மதிப்புலவர் அவர்தம் கேண்மை
       நெஞ்சுவந்து தமிழ்சிவம்போற் பேணிக் கொண்டார் 12

அன்புக்கு மனமளித்தார் எளிய வாழ்வில்
       அமைதிக்கு வடிவளித்தார் இனிய சொல்லின்
தன்மைக்கு நாவளித்தார் முதுமை வாழத்
       தமையளித்தார் வறுமைக்குப் புகல ளித்தார்
மென்மைக்கு மெய்யளித்தார் வாழ்நாள் முற்றும்
       மேலான தமிழ்வளர உழைப்ப ளித்தார்
வன்மைக்குத் துணைபோகாப் பொதுமைக் காக
       வாழ்வளித்தார் திரு. வி. க. இவர்க்கு நண்பர். 13

பலமொழிகள் படருமலை குறிஞ்சிப் பூப்போல்
       பைந்தமிழே மண்டுமலை நூல்கள் என்னும்
குலமுகில்கள் தவழுமலை அருவி யாகக்
       குலவிவரும் பேச்சுமலை சைவம் என்னும்
இலகுமுடி கொண்டமலை எங்கள் நெஞ்சில்
       இனியதமிழ் தனிநடையில் இயங்கும் வண்ணம்
நலவழியைத் தந்தமலை பகைவர் யாரும்
       நண்ணவொணா மறைமலையை நண்ணி வாழ்ந்தார். 14

இசையிலையாம் தமிழ்மொழியில் என்று சொல்லி
       இந்நிலத்தே வாழ்பகைவர் வாய டங்க
நசையுடனே ஆண்டுபதி னான்கு முற்ற
       நன்காய்ந்தே யாழ்நூலொன் றளித்த வள்ளல்
அசைவில்லாத் துறவுநெறி ஒழுகுஞ் செம்மல்
       அலைகடல்சூழ் இலங்கைமகன் விபுலா நந்தர்
இசையுடையார் வசையில்லார் நட்பும் பெற்றார்
       ஏழிசையாய் இசைப்பயனாய்த் திகழ வாழ்ந்தார். 15


1.திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகள்.