பக்கம் எண் :

ஊன்றுகோல்107

இலக்கணத்தொல் காப்பியமும் அதற்குச் சான்றோர்
       எழுதிவைத்த உரைகளுமோர் கடல்கோள் தன்னால்
கலக்கமுற அழியினுமே கந்த சாமி1
       யாரிருந்தாற் போதுமொரு கவலை யில்லை
சொலச்சொல்லி மீண்டுமவை எழுதி வைத்துத்
       துயர்தவிர்வோம் எனப்புகழும் நூல்வல் லாரின்
உலப்பிலதாம் தோழமையை நன்கு பெற்றார்
       உயர்நட்பிற் கிலக்கணமாய் வாழ்ந்து வந்தார். 16

நாவிரிக்கும் புகழ்மணக்கும் பொன்னி பாயுஞ்
       சோழவள நாட்டாரைச் சைவம் என்னும்
பூவிளைக்கும் செழுந்தேனில் திளைப்ப தன்றிப்
       புறத்துமனம் நாட்டாரைத் தமது நெஞ்சில்
பாவிசைக்குந் தமிழன்றி மற்றும் ஒன்றைப்
       படரவிட மாட்டாரைப் பொய்ம்மைக் காக
நாவசைக்க மாட்டாரை அமைதி சான்ற
       ந. மு. வே. நாட்டாரை நட்பாக் கொண்டார். 17

பகைமருள மேல்நோக்கித் திருகும் மீசை,
       படைத்தலைவர் எனநிமிர்ந்து பார்க்கும் பார்வை,
இகலறியா அரியேறு, பேசுங் காலை
       இடிமுழக்கம் அவர்பேச்சு, தமிழைத் தாழ்த்தப்
பகைவருமேல் விழிசிவந்து கனலைக் கக்கப்
       பாய்ந்துவரும் புலிப்போத்து, சட்ட நூல்கள்
பகர்புலவர் பாரதியார் என்று கூறும்
       பசுமலையார் இவர்க்கினிய நண்ப ரானார். 18

பேரரசர் நிகர்தோற்றம் சிவந்த மேனி,
       1பெ. ராம. சித. எனும்பெயரர்; நீறு பூசி
ஏரொழுகும் விரிநெற்றி யுடைய அன்பர்;
       எழிலொழுகுந் ‘தமிழ்வாழ்த்து’ வையம் ஈன்ற
சீரணியுங் கலிவிருத்தம் பாடித் தந்து
       சிறப்படைந்த கரந்தையுறு 2கந்த சாமிப்
பேருடையார் இருவரையும் தமது வாழ்விற்
       பெற்றஇரு கண்களெனப் பேணி வந்தார் 19


1.கந்தசாமியார் - இலக்கணத்தில் வல்லாராகிய கிண்ணிமடங் கந்தசாமியார்.
1.நச்சாந்து பட்டி பெ.ராம.சித.சிதம்பரம் செட்டியார். 2.கரந்தை நீ.கந்தசாமிப்பிள்ளை.