பக்கம் எண் :

108கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8

உரந்தழுவுந் தமிழ்மறவர் அஞ்சா தென்றும்
       உரைநிகழ்த்தும் சொற்செல்வர் படர்ந்த டர்ந்து
நிரந்துவரும் எழில்மீசை யுடைய வீரர்
       நிலத்துயர்ந்த செந்தமிழின் வளர்ச்சிக் காகக்
கரந்தைதனில் தமிழ்ச்சங்கம் கண்ட சோழர்
       கனிவுடையார்3 உமாமகே சுரனார் என்று
சிறந்தபெயர் கொண்டவரை நயந்து போற்றிச்
       செயற்கரிய நட்புளத்திற் பொலிய வாழ்ந்தார். 20

கொண்டொழுகும் பண்பாட்டில் இனிமை யுண்டு;
       கொழித்துவரும் நன்பாட்டில் எளிமை யுண்டு;
தண்டமிழில் நீங்காத நெஞ்சம் உண்டு;
       தருபொருளை வாங்காத கையும் உண்டு;
பண்டையநற் புகழேந்தி போன பின்வெண்
       பாவிற்குப் புகழேந்தித் தந்த துண்டு;
கண்டுநிகர் கவிமணியார் நெஞ்சில் நின்று
       களிநடஞ்செய் கதிரேசர் ஆன துண்டு. 21

பாட்டின்பஞ் சுவைப்பதிலே தனித்த ஆற்றல்
       படைத்துயர்ந்த சுவைமணியார்,1 இனிய பாட்டைக்
கேட்டவர்க்குச் செவிகுளிரப் பாடிப் பாடிக்
       கிளக்கின்ற சொல்வல்லார்; கம்பன் தந்த
பாட்டின்கண் பலவற்றைச் சுண்டிப் பார்த்துப்
       பதர்களிவை எனத்தூற்றும் செயலார்; அக்கோட்
பாட்டுக்கு மாறுபடும் நிலையி ருந்தும்
       பண்டிதமா மணி,மணியார் 2நண்ப ரானார். 22

சேதுசமத் தானத்துப் புலவ ரான
       செந்தமிழ்தேர் இராகவையங் கார்க்கு நண்பர்;
ஏதமொரு சிறிதுமிலாக் கா.சு பிள்ளை
       என்றபெரு மகனார்க்கும் இனிய நண்பர்;
ஓதுமொழிச் சுந்தரனை ஆரூர் தந்த
       ஒள்ளியனைத் தோழமையால் அணைத்துக் கொண்ட
மாதுசுமக் குஞ்சடையான் அடிவ ணங்கும்
       மாமணியார் பண்பாளர் தொடர்பு கொண்டார். 23


3.தமிழவேள் த.வே.உமாமகே சுரனார். 1.2.இரசிகமணி. டி.கே.சி.