11 பொதுப்பணிபுரி காதை இயலுண்டாம் இசையுண்டாம் கூத்தும் உண்டாம் இனியதமிழ் மொழியிடத்தே என்பர் மேலோர் மயலுண்ட அறிவுடையார் கூடி யிங்கு மறுப்புரைத்தார் இசையில்லை தமிழில் என்றே; அயல்மொழிக்கே உரியவராய் அம்மொ ழிக்கே அடிமைகளாய் இருப்பவர்தம் கூற்றே யாகும்; செயல்மறந்து தமிழ்மாந்தர் உறங்கும் போது திருடவரும் கயவருக்கு வேட்டை தானே. 1 தோற்கருவி துளைக்கருவி நரம்பு கட்டித் தொடுகருவி வெண்கலத்துக் கருவி என்று நாற்கருவி கண்டவர்நாம்; பாடு தற்கு நன்மிடறும் ஒருகருவி யாகும் என்றோம்; ஏற்கமதி யிலராகி வஞ்ச நெஞ்சர் இசையிலையே தமிழ்மொழியில் என்று சொன்னார்; வேற்கருவி எடுத்தெம்மைச் சாய்ப்ப தற்கு விலாவிடையே பாய்ச்சுதல்போற் கேட்ட தம்மா. 2 இறைவாழுங் கோவிலுக்குள் உரிமை யில்லை இசையரங்கில் திருமணத்தில் உரிமை யில்லை துறைதோறும் தமிழ்மொழியின் உரிமை வேண்டித் தொடருங்கால் மொழிவெறுப்பு, பசுமை என்று பறைசாற்றும் புல்லுருவிக் கூட்ட மொன்று; பழமரத்தில் அதுவளர விட்டு விட்டோம்; நறைவாழும் மலரிருக்கக் கள்ளிப் பூவை நாடியதால் நாம்பெற்ற பலனைப் பாரும். 3 |