பக்கம் எண் :

118கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8

தமிழ்மொழியில் வெறுப்புடையோர் அதனி டத்துத்
       தணியாத பகையுடையோர் எவ்வி டத்தும்
அமுதனைய மொழிவளர மனமே யில்லோர்
       அயன்மொழியில் வெறுப்பென்றும் பகைமை என்றும்
நமையெதிர்த்துப் பழியுரைத்துத் திரிய லுற்றார்
       நன்றறிய மாட்டாரும் நம்பு கின்றார்
நமதன்னை நாட்டுக்கு வாழ்வு வேண்டின்
       நண்ணுபிற நாட்டின்மேல் வெறுப்பா என்ன? 4

என்சமயம் வாழ்கவென ஒருவன் சொன்னால்
       இருந்துவரும் பிறசமய வெறுப்பா என்ன?
என்மொழியிற் பாட்டிசைக்க வேண்டு மென்றால்
       எதனிடத்தும் வெறுப்பில்லை; வேண்டு மென்றே
புன்மொழிகள் உரைக்கின்றார் தமிழை மீண்டும்
       பூக்கவிடா தொழிப்பதுதான் அவர்தம் நோக்கம்;
வன்முறையில் வாதிடுவோர் எந்த நாட்டில்
       வாழ்கின்றார்? தீமைசெய ஏன்நி னைத்தார்? 5

பாட்டரங்கம் தமிழ்நாட்டில்; அரங்க மேறிப்
       பாடுபவன் தமிழன்தான்; அந்தப் பாட்டைக்
கேட்டிருக்கும் அவையினரும் தமிழ மாந்தர்;
       கீர்த்தனையாம் கிருதிகளாம் இவையே கேட்கும்
நாட்டமொடு வந்தவர்க்கோ விளங்க வில்லை
       நாமினியும் பொறுத்திருந்தாற் பயனே யில்லை
வேட்டெழுந்து தமிழ்வேண்டும் என்று சொன்னோம்
       விளங்குகிற மொழிப்பாடல் வேண்டும் என்றோம். 6

இசைக்கிளியை மொழிக்கூண்டில் அடைக்க வேண்டி
       எழுகின்றார் என்றுநமைப் பழித்துச் சொன்னார்1
இசைக்குயிலைத் தமிழ்வானில் பறக்கா வண்ணம்
       இறகொடித்துப் பிறமொழிக்குள் அடைத்து விட்ட
வசைக்குரியார் யாவரெனத் தெரியா வண்ணம்
       வழிமாற்றித் திசைதிருப்பிக் காட்டி விட்டுத்
தசைப்பிண்டத் தலையாட்டிப் பொம்மை முன்னர்த்
       தமிழ்விடுத்துப் பிறமொழியே பாடி வந்தார். 7


1.இசைக்கிளியை மொழிக்கூண்டில் அடைப்பது போலப் படம் போட்டுத் தமிழ் வார இதழொன்று
விகடம் செய்தது