பக்கம் எண் :

ஊன்றுகோல்119

கொடுமையிது கொடுமையெனக் கொதித்தெ ழுந்து
       கொடையண்ணா மலையரசர் ‘பத்துப் பாட்டில்
விடுகஇனித் தமிழ்பாட்டிற் காறி டங்கள்
       வேற்றுமொழிப் பாட்டுக்கு நான்கி டங்கள்
தடைஎனவோ இதற்கு’ மெனத் தமிழர் சார்பில்
       தமிழ்நாட்டில் தமிழரசர் பிச்சை கேட்டார்
கெடுமதிய ரதன்பின்னு மிரங்க வில்லை
       கிளர்ச்சிசெய முனைந்தபினும் திருந்த வில்லை. 8

நம்முன்னோர் தேடிவைத்துத் தொன்று தொட்டு
       நமக்குரிமை யாகிவரும் வீட்டில் வாழ
வம்பென்ன? வழக்கென்ன? அந்த வீட்டில்
       வாடகைக்கோ ரிடங்கேட்டோம் எவனி டத்தோ!
அம்மொழியார் விரும்பவில்லை தடைக்கல் லானார்
       அடஇனியும் பொறுப்பதுவோ? உரிமை காக்க
இம்மண்ணிற் சிறுபுழுவும் முயலு மன்றோ
       இனிநமக்குத் தமிழரெனும் பெயர்தா னேனோ. 9

மாற்றிதற்குக் காண்பதற்கு நினைந்த அண்ணா
       மலையரசர் இயக்கமொன்று தமிழி சைக்குத்
தோற்றுவித்தார்; நல்லவர்கள் ஒத்து ழைத்தார்;
       துணைநின்று பணிபுரிந்த இதழும் உண்டு
சாற்றைநிகர் மொழிப்புலவர் துணிந்து வந்து
       தகுமுறையால் தமிழிசைக்குத் தொண்டு செய்தார்;
வேற்றுமொழிப் புலமையிலும் வீறு பெற்று
       விளங்குகதி ரேசருக்கும் சரிபங் குண்டு. 10

நாடுமுழு தெங்கணுமே தமிழ்மா நாடு
       நடத்திவரும் அரங்குகளில் தலைமை யேற்றார்;
ஏடுகளில் விளக்கங்கள் பிறர்க ருத்துக்
       கெதிர்ப்புரைகள் என்றெல்லாம் எழுதி வந்தார்;
“பாடுவது தமிழானால் என்ன தீமை
       படர்ந்துவிடும்? ஏனச்சம்? யாருக் கென்ன
பாடுவரும்? தமிழாலே தமிழர் நாட்டில்
       பாடுவது தவறென்றால் என்ன நீதி?” 11