120 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8 |
“பண்ணமைத்த தேவாரப் பாடல் கேட்டால் பரமனுக்கும் நெஞ்சுருகும்; செவிம டுத்தோர் எண்ணத்தை நெக்குருக்கும்; இராம லிங்கர் இயற்றியநல் லருட்பாடல் தேனும் கைக்கும் வண்ணத்தை உருவாக்கும்; அயன்ம தத்தில் வருவேத நாயகனார் வழங்கும் பாடல் கண்ணொத்த சமரசத்தைப் படைத்துக் காட்டும்; கனியிருக்கக் காய்கவர்தல் மடமை யன்றோ?” 12 “தாண்டவனார்1 பதமிருக்கப் பிறபாட் டுக்குத் தாளங்கள் இடல்முறையா? கையில் பையில் வேண்டுபொருள் நிறைந்திருக்கக் கடனுக் காக வேற்றவர்பின் தொழுதுசெலல் சரியா? பத்தி வேண்டுமெனில் விளங்குமொழிப் பாடல் வேண்டும்; விளங்காத மொழிகேட்டால் உணர்வா தோன்றும்? நீண்டபுகழ் பாரதிகள் குஞ்ச ரங்கள்2 நிலைதமிழில் வீணுக்கா பாடிச் சென்றார்?” 13 இசைசுவைத்து மகிழ்வதற்கு மொழிவேண் டாவென் றியம்புகின்றீர்; அறிவுடைய வாதம் அன்று; வசைமிகுந்த பிடிவாதம்; நீவிர் பாடும் வடமொழியும் தெலுங்கிசையும் மொழிகள் என்ற இசைவுமக்கு வரவிலையோ? ஏனோ இந்த இழிசெயலை மேற்கொண்டீர்? தமிழில் மட்டும் நசைவிடுத்த காரணமென்? உங்கள் வாழ்வின் நலிவுக்குத் தமிழ்செய்த தீமை என்ன? 14 “மொழிவேண்டா என்றுரைத்தீர்; வாதத் துக்கு மொழிந்ததைநான் ஏற்கின்றேன்; இசைஎ ழுப்பக் குழலிருக்க யாழிருக்க அவைவி டுத்துக் குரலெழுப்பிப் பாடுவதேன்? பாடி வாழுந் தொழிலுடைய பாகவதர் கூட்டந் தான்ஏன்? தொண்டைகிழித் தலறுவதேன்? அலறும் ஓசை மொழியன்றோ? இசைக்கருவி யிருக்கும் போது மொழிஎதற்கோ? அதுமட்டும் வேண்டும் போலும்” 15
1.முத்துத்தாண்டவர். 2.பாரதிகள் குஞ்சரங்கள் - சி.சுப்பிரமணிய பாரதியார், கவிகுஞ்சர பாரதியார் போன்றோர் |