பக்கம் எண் :

ஊன்றுகோல்121

எதிர்ப்பவரும் எடுத்துரைக்க இயலா வண்ணம்
       இவ்வகையில் வாதங்கள் எடுத்து வைப்பார்;
கதிர்ப்பெருக்கம் கீழ்வானில் விரியும் போது
       காரிருளுக் கங்கென்ன வேலை? நம்பால்
மதிப்பெருக்கம் குறைந்ததனால் புகுந்த வற்றை
       மதித்துவர வேற்றதனால் வந்த கேடு;
சதிப்பெருக்கம் இருப்பதைநாம் உணர்ந்து கொண்டால்
       தமிழ்நாட்டில் ஒருகுறையும் நேரா தன்றோ? 16

எரிஏய்ப்ப வருபகையை வெல்ல லாகும்
       இனிதேய்க்கும் அகப்பகைதான் எளிதோ வெல்ல?
அரியேற்றை வலையிட்டுப் பிடிக்க லாகும்;
       அடங்காத கொசுவுக்கும் அதனை யிட்டால்
குறிபார்த்து நுழைவழியைத் தெரிந்து கொண்டு
       கொடுக்காத தொல்லையெலாம் கொடுத்தே நிற்கும்;
வருமாற்றை நன்கறிந்து தோன்றி டத்தில்
       மருந்தடித்தால் மடிந்தொழியும் தொல்லை தீரும். 17

உண்பதும் ஓய்வதும் என்பயன்
       தந்தன உற்றறிவால்
எண்ணுக நற்பணி செய்திட
       நண்ணுக என்றிசைத்தே
வண்முகில் போலுளங் கொண்டவர்
       வாழ்1பல வான்குடியில்
கண்மணி வாசகச் சங்கமென்
       றொன்றனைக் கண்டனரே. 18

காட்டைத் திருத்திக் கலைகள்
       பலதேர் கழகமென
நாட்டிற் றிகழ்தர அண்ணா
       மலைகண்ட நன்னகரில்
வேட்டு மணிவா சகமன்றம்
       கண்டு வியாழன்தொறும்
பாட்டின் நலத்தாற் பயனளித்
       தார்மணிப் பண்டிதரே. 19


1.பலவான்குடி - குன்றக்குடிக்கருகிலுள்ள ஊர்.