பக்கம் எண் :

ஊன்றுகோல்135

இன்னியம் முழங்கும் ஓர்பால்
       இசையுடன் மூவர் சொன்ன
நன்னயங் கெழுமு பாடல்
       நலமுற ஒலிக்கும் ஓர்பால்
சின்னவர் ஓடி யாடுஞ்
       சிரிப்பொலி கேட்கும் ஓர்பால்;
முன்னைய மறைகள் ஓதும்
       முழக்கமுங் கேட்கும் ஓர்பால். 4

கண்களைக் கவருங் கோலம்
       காதுகள் இனிக்கும் பாடல்
தண்ணெனும் பந்தர் யாவும்
       சார்தரப் பொலிந்த தவ்வூர்;
பண்ணுயர் தமிழில் வல்ல
       பண்டிதர்க் கறுபான் ஆண்டு
நண்ணிய தறிந்த மக்கள்
       நகரினை அழகு செய்தார். 5

கொட்டிய முழவின் ஓசை,
       குலவிய குழலின் ஓசை,
1 பட்டியல் மடவார் பேச்சு,
       பச்சிளங் குழந்தை பாடல்,
2அட்டிலில் முனைவார் கூவல்,
       ஆடவர் அங்கு மிங்கும்
இட்டநற் பணியின் மேவி
       அலைபவர் எழுப்பும் ஓசை, 6

வரவுரை கூறும் ஓசை
       வருபவர் வழங்கும் ஓசை
மருவிய அன்பின் வந்தோர்
       வழங்கிய வாழ்த்தின் ஓசை,
பரிசினைச் சுமந்து வந்தோர்
       பரப்பிய ஓசை யெல்லாம்
செறிதரப் படர்ந்த தந்தச்
       செந்தமிழ் மனையில் யாண்டும். 7


1 பட்டுடுத்த, 2 சமையற்கூடம்.