இவ்விருவர் தமக்குள்ளும் வேறு பட்ட இருகருத்துக் கொண்டமையால் தனித்திருந்தார்! ஒவ்வொருவர் மனத்திடத்தும் பிளவே யன்றி ஒன்றுபடும் நிலையில்லை; எனினும் அந்தச் செவ்வியநற் புலவருக்கோ நோயென் றாங்கே செயல்மறந்து துணைவியுடன் ஓடி வந்தார்; அவ்வியல்பை என்னென்போம் சான்றோர் சான்றோர் பாலரென அன்றுரைத்த மொழிபொய் யாமோ? 4 அருகில்வரும் முருகப்பர் தம்மைக் கண்டார் அப்புலவர் ஓவெனவே அலறி விட்டார்; உருகிவரும் உணர்ச்சியினால் குழந்தை போல ஒருநொடியில் மாறிவிட்டார் ‘எனக்கு வந்த பெருகுதுயர் தருநோயைப் பாரும் ஐயா பிழைஎன்ன நான்செய்தேன் இறைவன் என்பால் தருதுயரை யார்துடைப்பார் ஐயோ’ என்று தாளாமல் அழுதழுது புலம்பி விட்டார். 5 அருகிருந்த முருகப்பர் துணையை நோக்கி ‘அம்மாஅம் மா’ வென்று கூவி விட்டார் கருவிருந்து பெற்றெடுத்த தாயை இன்று காண்கின்றேன் உம்முருவில் அம்மா! அம்மா! உருகுகிற தெனதுமனம்; என்னைக் காண ஓடோடி வந்தீரே! அம்மை யப்பர் அருகில்வரல் போலுணர்ந்தேன்’ எனப்பு லம்பி அழுதழுது கண்ணீரில் நனைந்தி ருந்தார். 6 பாட்டுக்குள் நயமுரைத்து மகிழ வைத்த பண்பட்ட செந்நாவில், தமிழ்மு ழக்கம் கேட்பிக்கும் மணிநாவில், புலம்பல் ஓசை கேட்டதனால் மனமுருகிக் கண்ணீர் சிந்தி நாட்டுங்கற் சிலையானோம் சிறிது நேரம் நாவசைய விலைஎமக்குப் பின்னர்த் தேறி ஏட்டுக்குள் ளடங்காத துயரம் மாற இயன்றவரை முருகப்பர் எடுத்து ரைத்தார். 7 |