பக்கம் எண் :

146கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8

பணிபுரியும் திருத்தொண்டர்
       பழங்கதையும் மூவர்தரும்
கனிமொழியும் மொழிவதற்குக்
       கதிர்மணியே நாவைத்தாய்.’ 5

‘உலகமெலாம் சிவமயமாய்
       ஒளிபெறவே உளங்கொண்டாய்
அலகில்பிற சமயங்கள்
       அடுத்துறினும் அகச்சமயம்
குலவிவருஞ் சித்தாந்தக்
       குறிக்கோளைத் தெளிந்துணர்ந்தாய்
நலமருளும் சிவநெறியில்
       நடந்தொழுகும் அருள்பெற்றாய்.’ 6

‘அறுபத்து மூவர்வர
       லாறுதெளிந் தறிந்தனைநீ
ஒருபத்தும் தொகையெட்டும்
       உளவாறு நுகர்ந்தனைநீ
இருபற்றும் உடைமையினால்
       எழிற்றமிழும் சிவநெறியும்
பருவத்துப் பயிர்போலச்
       செழித்துயரப் பரப்பினைநீ.’ 7

‘மறவாத சிவனடியும்
       மருளாத தமிழுணர்வும்
திருவாத வூரடிகள்
       வாசகமும் தெளிந்ததனால்
பிறவாத பேரியாக்கை
       பெறுமாறு வேண்டுது’மென்
றொருவாத அன்புளத்தால்
       திருமடங்கள் ஓதினவே. 8