பெருகி வளர்ந்ததற்கு அச் சபையே உறுதுணையாயிற்று. ‘பொன் குன்ற நகருறையும் புலவருக்குப் புகழ்விளைக்கும் சபையொன்று கிடைத்ததையா’ (3:21) என்றும் ‘சாலவுணர் இவராலே சபையும் அந்தச் சபையாலே இவருமுடன் வளரக் கண்டோம்’ (3;25) என்றும் ஆசிரியர் இதனைச் சுட்டிக்காட்டத் தவறவில்லை. அதனால்தான் ‘தழைத்துவரும் அருள்மனத்தர் பழநியப்பர் அமைத்த சபை இவருக்கோர் ஊன்றுகோல் அமைந்திருக்கத் தமிழ்பரவிச் செழிக்கக்கண்டோம்’ (3:31) எனப் பாவலர், பண்டிதமணியின் கையில் இலங்கிய ஊன்றுகோற்கு நிகராகக் கருத்தில் துலங்கிய சபையாகிய ஊன்றுகோலையும் நமக்கு நினைவுபடுத்துகிறார். பிறிதோரிடத்தில் பண்டிதமாமணியைத் ‘தளர்ந்நிருந்த தமிழ்மாந்தர் செயலாற்ற ஊள்றுகோலாய் வருபவர்தாம் இவர்’ (4:5) என அறிவுறுத்துவது, நெஞ்சை நெகிழ்விக்கின்றது. இங்ஙனம் நூன் முழுமையும் இவ்வூன்றுகோற் செய்தி வெளிப்படையாகவும் குறிப்பாகவும் இடம்பெற்றுக் காப்பியத்திற்கேற்ற பாவிகமாகி நிற்கின்றது. தமிழுணர்வும் தமிழறிவும் தளருமிடத்தெல்லாம் அதனை மீண்டும் நிமிர்ந்து நிறுத்த, இவ் ‘வூன்றுகோலைக்’ கவிஞர் பயன்படுத்திக் கொள்கிறார். பண்டிதமணியின் வரலாறு அதற்கு நன்கு கைகொடுத்து உதவுகிறது. தமிழ்மொழியைக் கையாள்வோர் ஏதும் பிழைசெய்யின், அவர் மனத்திற்பதியும் வண்ணம் அதனைச் சுட்டிக்காட்டுவது மணியாரின் செயலாகும். பீமகவி போன்ற போலிப் புலவர்களை அவர் அயராது சாடிநின்றார். அவர் தலைமையில் யாரும் பேச அஞ்சுவர் என்பதே, அவர் உடனுக்குடன் முகத்திலறைந்தாற்போல் குற்றங்குறைகளைச் சுட்டிச் சாடியதனாலே யாம். இதில் பலர் நெளிவு சுளிவு பார்த்து, விட்டுக் கொடுத்துப் போவதனாலேதான் இன்று பயிரையே களைகள் சூழ்ந்து மூடி விட்டன. எனவே பண்டிதமணியின் இத்திருவுளக் கருத்தை மனங்கொண்டு, இந் நூலாசிரியர் தாமும் அதே கருத்தினராதலின் அவ்வகையான் ஆற்றல் மிக்க கருத்துரைகளை, அறையவேண்டு மிடங்களிலெல்லாம் அடித்துக்கூறி நூலுணர்வை அந்நெறிப் படுத்தியுள்ளார். இலங்கையிலிருந்து வந்த கதிரேசரைத் ‘தமிழெனும் தாயைக் காக்க வந்திவண் தங்கிவிட்டான்’(2:16) என்பார். பண்டிதமணியாருடன் பழகிய முன்னோடியாம் அரசன் சண்முகனாரும் ‘அடித்துரை |