பக்கம் எண் :

ஊன்றுகோல்153

‘பிறந்ததன் னாட்டிற் பேசும்
       மொழியினைப் புறக்க ணித்து
மறந்தயல் மொழிக்காட் பட்டு
       மனத்துறக் கற்றா ரேனும்
சிறந்தநன் மொழியாற் கொள்ளும்
       சீர்மையில் முற்றுப் பெற்ற
திறந்தனைக் கொண்டா ரென்று
       செப்பிடல் அரிதே’ யென்றார். 11

‘வருவன எவையும் சொல்லும்
       வல்லமை வாய்ந்த வேர்ச்சொல்
பெருகிய தமிழ்மொ ழிக்கட்
       பிறமொழிச் சொற்க லந்து
சிறுமைகள் செய்து வாழ்தல்
       செந்தமிழ்த் தாய்க்குச் செய்யும்
ஒருபெருந் தீங்கே யாகும்
       ஒதுக்குக’ எனப்ப ணித்தார். 12

‘வையகம் ஈன்ற மக்கள்
       முதன்முதல் வாய்தி றந்து
பையவே நாவ சைத்த
       பைந்தமிழ் மொழியை யிங்குப்
பொய்யினால் வடமொ ழிக்கட்
       பிறந்ததாப் புகல்வ ராயின்
மெய்யறி வில்லார் கூறும்
       வெற்றுரை யதுவாம்’ என்றார். 13

‘பிறமொழிச் சொற்க லந்து
       பீடுறும் இலக்க ணத்தின்
வரன்முறை யழித்து விட்டு
       வழுவுடன் எழுதி யிங்குத்
தருநடை எளிய தென்று
       தமிழனே சொல்வ னாயின்
அறிவது தெளியும் நாளை
       அவன்பெறல் வேண்டு’ மென்றார். 14