பக்கம் எண் :

36கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8

1
கதிரெழு காதை

உலகெலாம் உய்ய வைக்கும்
       உயரிய கொள்கை யாவும்
நிலவிய தொகையும் பாட்டும்
       நிகழ்த்திய சங்கம் ஏறி
அலகிலாப் பெருமை பூண்டாள்
       அன்னையாம் தமிழ ணங்கின்
மலருலாம் அடிகள் வாழ்த்தி
       மகிழ்வுற மனத்துள் வைப்பாம் 1

யாதும்நம் ஊரே யாகும்
       யாவருங் கேளிர் என்னும்
கோதிலாக் கொள்கை முற்றுங்
       குறித்திடும் பாட லொன்றை,
ஓதுவார் உள்ள மெல்லாம்
       உவந்துவந் தேத்தும் வண்ணம்
ஓதினான் 1கணியன் என்னும்
       ஒப்பிலாச் சங்கச் சான்றோன் 2

விரிமனக் கொள்கை யெல்லாம்
       விரித்திடுஞ் சங்கப் பாட்டுக்
குரியவன் கணியன் என்னும்
       ஒருதனிப் புலவ னான
குரிசிலை உலகம் போற்றக்
       கொடுத்தது தமிழ்ப்பூங் குன்றம்
சிறியதே எனினும் மிக்க
       சிறப்பினாற் பெரிய தாகும் 3


1.கணியன் பூங்குன்றனார்.