பக்கம் எண் :

ஊன்றுகோல்43

மூவிரண் டாண்டு செல்ல
       முதன்முதல் தொடங்குங் கல்வி
நாவினில் ஓதி ஓதி
       நலம்பெற விழைந்து பள்ளிக்
கோவிலுட் புகுந்த தந்தக்
       குலக்கதி ரேசப் பிள்ளை
பூவினுள் மணிவண் டொன்று
       புகுந்தது தேனை மாந்த 4

பழுதற எழுதக் கற்றுப்
       படித்தனன் நெடுங்க ணக்கை
அழகிய ஆத்தி சூடி
       அறஞ்சொலும் உலக நீதி
விழைவுடன் ஓதி ஓதி
       விரைவினிற் கற்றுத் தேர்ந்து
தொழுதகும் ஆசா னுக்குத்
       தொடுத்தனன் புகழின் ஆரம் 5

படித்தனன் ஏழு திங்கள்
       பயின்றது போதும் என்று
தடுத்திட எண்ணி முற்றுப்
       புள்ளியும் தந்தை வைத்தார்
அடிக்கடி படித்த பாடல்
       அடிமனத் தெழுந்து நின்று
நடித்ததோர் இன்பக் கூத்து
       நாளெலாம் நினைந்து பார்த்தான் 6

பள்ளியில் ஏழு திங்கள்
       பயில்கதி ரேசப் பிள்ளை
தெள்ளிய மதிய ராகித்
       தேர்ந்தநற் புலவ ராகி
அள்ளிய புகழாம் செல்வம்
       அளப்பில பெற்றான் என்றால்
உள்ளவும் படுமோ அந்த
       ஓய்விலா உழைப்பை அம்மா! 7