பக்கம் எண் :

ஊன்றுகோல்53

3
சபைகாண் காதை

திருக்கோயில் பலஎழுப்பச் சிதைவிடத்துத்
       திருப்பணிகள் எனும்பேரால் திருத்திக் கட்ட,
வெருக்கொள்ளும் வெயில்நாளில் வேட்கையுடன்
       வருவார்க்கு விழைந்தெழுந்து தண்ணீர்ப் பந்தர்
உருக்கொள்ளு மாறமைக்க, உணவுதரும்
       அறச்சாலை உண்டாக்கக் குளங்கள் தோண்டப்
பெருத்தநிதி எடுத்தெடுத்து வழங்குவது
       பெருமைஎனப் பேணுவது வணிகர் நாடு! 1

கடல்கடந்து நெடுந்தொலைவு சென்றிடுவர்
       கணக்கிலநாள் அங்கிருந்து கொண்டு விற்பர்;1
மடல்வரைந்து மனைக்கிழத்தி மனமகிழ
       மறவாமல் உய்த்திடுவர்; நெடுநாள் தொட்டுத்
தொடர்ந்தெழுந்த ஆள்வினையால் தொகைமிகுத்துத்
       தாய்நாட்டுத் துறைமுகத்தை நோக்கி வந்து
படர்ந்துவரும் ஆர்வத்தாற் கால்வைப்பர்
       பலபலநல் லறஞ்செய்யக் கால்கோள் வைப்பர் 2

வழங்குதலை வழக்காக்கி வாழ்ந்திருந்த
       வணிகர்சிலர் புதியஅறஞ் செயநி னைந்தார்
முழங்குதிரைக் கடல்கடந்து முயன்றுபெறுஞ்
       செல்வமெலாம் ஈந்துவக்க முனைந்து வந்தார்;
எழுங்கலைகள் பலவளருங் கழகங்கள்
       எழிலறிவுக் கலைக்கோவில் எழுப்பி நின்றார்;
பழங்கலைகள் பதிப்பித்தார் தமிழிசைக்குப்
       பயன்பட்டார் மாறிவருங் காலம் நோக்கி 3


1.வெளிநாட்டு வாணிகத்தைக் குறிக்கும் செட்டி நாட்டு வழக்குச் சொல்.