பக்கம் எண் :

62கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8

4
மணம் புணர் காதை

ஆண்டுபதின் மூன்றானால் ஆடவர்தம்
       திருமணத்தை அதற்கப் பாலும்
தாண்டவிட மாட்டார்கள் தனவணிகர்
       வழக்கமிது; மரபின் கொள்கை
பூண்டொழுகும் குலத்துவரும் பூங்குன்றப்
       புலவருக்கோ முப்பான் ஆண்டு
தாண்டியுமப் பேற்றுக்குத் தகுதிதர
       அக்குலத்தார் தள்ளி நின்றார் 1

நூலொன்றும் பொருளுணர்ந்து நயமுணர்ந்து
       நுவல்கின்ற நிறைபு லத்தார்
காலொன்றுங் குறையறிந்து பெண்கொடுக்கக்
       கருதுபவர் எவரு மில்லை;
வேலொன்று தருபுண்ணில் வெந்தழல்தான்
       வீழ்வதுபோல் வெந்து நொந்து
நாளொன்று வாராதோ எனக்கலங்கி
       நலிந்துழன்றார் அவரை ஈன்றார் 2

குலம்பார்ப்பர், குவிசெல்வ வளம்பார்ப்பர்,
       குடிபார்ப்பர், சீரும் பார்ப்பர்,
நலம்பார்ப்பர், கலன்பார்ப்பர், நடந்துவரும்
       நடைபார்ப்பர், உடையும் பார்ப்பர்,
நிலம்பார்ப்பர், நாகரிக மனைபார்ப்பர்,
       நிகழ்மணத்தில் அறிவு, பண்பு
நலம்பார்க்கும் நிலைமட்டும் மறந்திடுவர்
       நகரத்தார் நிலைதான் என்னே! 3