பக்கம் எண் :

ஊன்றுகோல்63

மகனுக்குத் திருமணநாள் வாராதோ
       எனஈன்றார் வருந்தி நிற்க,
தொகைமிக்க நூல்வல்லார் அதையுணர்ந்து
       ‘துயர் விடுக என்பின் வந்தார்
மகிழ்வுக்கு வழிசெய்க மணஞ் செய்க
       மற்றெனக்குத் தேவை யில்லை;
1பகலுக்கும் பயின்றிடுவேன் சபைவளரப்
       பணிசெய்வேன்’ எனப்ப கர்ந்தார் 4

உறுபிணியாற் கால்தளர்ந்த கதிரேசர்
       உளந்தளரார், ஊன்று கோலின்
பெருவலியால் நாடெங்கும் நடந்துலவித்
       தமிழ்பரப்பி, அதனைப் பேணாச்
சிறுசெயலால் தளர்ந்திருந்த தமிழ்மாந்தர்
       செயலாற்ற ஊன்று கோலாய்
வருபவர்தாம் இவரென்று தெளியார்தாம்
       மகட்கொடைக்கு மறுத்து வந்தார். 5

கல்விவளம் பரப்புவதாற் கதிரேசர்
       புகழ்மணந்து காணும் செவ்வி
செல்வவளங் குறியாகக் கொண்டோர்க்குச்
       செவ்வையுறத் தெரிய வில்லை;
அவ்வளவில் ஒருமணத்தைப் பொருட்டாக
       அவர்மனத்திற் கொள்ளா ராகி
எவ்வகையில் தமிழ்மணக்கச் செய்வமென
       எந்நாளும் எண்ணி நின்றார் 6

செல்வாக்குப் பரவிவரப் புகழ்ச்செல்வம்
       சேர்ந்துவர அத்தை வீட்டார்
நல்வாக்குக் கொடுத்தார்கள் மகட்கொடைக்கு
       நாளடைவில் மாறி விட்டார்
இல்வாழ்க்கைத் துணைவியென முதன்மகளை
       ஈவதென்று சொன்ன சொல்லை
அல்வாக்கென் றாக்கியவர் வேறிடத்தில்
       அம்மகளைக் கொடுத்து விட்டார். 7


1.நாள் முழுமைக்கும்