பக்கம் எண் :

ஊன்றுகோல்65

பெண்ணணங்கின் பெருந்துணிவை 3ஈகமிகு
       பேருளத்தை இரக்கப் பண்பை
எண்ணினிங்குப் புல்லரிக்கும் இருவிழிகள்
       புனல்மல்கும் இறும்பூ தாகும்;
அண்ணலிங்குப் பெற்றதுணை மனவளத்தை
       அளந்துரைக்க யாரே வல்லார்?
கண்ணகியைக் கண்ணெதிரே கண்டதில்லை
       கதிர்மணியார் வீட்டிற் கண்டோம் 12

கொண்டான்றன் குறிப்புணர்ந்து நடந்தொழுகுங்
       குலமகளாய்க் கூடி வந்து
கண்டாரை விருந்தோம்பிக் காக்கின்ற
       கலைமகளாய் எவரை வீட்டிற்
கண்டாலும் பணிந்துரைத்துக் கனிந்தமொழி
       தருமகளாய் எளிமை பூண்டு
கண்டாரும் தொழத்தக்க திருமகளாய்க்
       கற்பரசி வாழ்ந்து வந்தார் 13

‘கலைவாழ்வின் விளக்கமெனக் கதிரேசர்
       காண்பரெனிற் கற்பின் செல்வி
கலைவாழ்வின் அமைதியெனத் திகழ்ந்திடுவர்;
       கனிவாயில் மூர லொன்று
நிலையாகக் குடியிருக்கும் களங்கமிலா
       நெஞ்சிருக்கும்; அங்கி ருந்து
விளைவாகும் மொழியெல்லாம் மழலையென
       இனிமையினை விளைத்து நிற்கும்’ 14

‘அயர்வின்றி விருந்தோம்பும் பண்பிருக்கும்;
       அவர்பிறந்த செட்டி நாட்டின்
உயர்வொளிர அமைதிமிகும் கோலத்தில்
       உடலிருக்கும்; கணவர்க் கென்றே
உயிர்வாழும் பெருமையுடன் மெல்லுடலில்
       உரமிருக்கும்; காணுந் தோறும்
உயவந்த தமிழன்னை போல்வ’ ரென,
       1தெ.பொ. மீ உரைத்தார் அன்று 15


3ஈகம் - தியாகம் 1.பன்மொழிப்புலவர். தொ.பொ.மீனாட்சி சுந்தரனார்.