ஆறு முழத்தின் ஆழம் அமையச் சோருத லின்றித் தோண்டுக, அதனுட் செம்பொன் இலதேல் செய்தஅக் குழியுள் அன்பின் வந்த அடியவன் அவனைச் சீவன் முத்தி சேர்பயன் என்று 260 யாவரும் போற்ற ஆவியோ டிறக்கி முறையாற் சமாதி முற்றுறக் கட்டி இறையோற் கெழுப்பும் கோவிலும் எடுத்து நினது கையால் நித்திய பூசையும் இயற்றுக’ என்றோர் ஆணை யிட்டனன்; 265 முருகன் ஆணையை முடிமிசைக் கொண்டு கருதி நடக்குங் கடப்பா டுடையேன்; ஐய நீவிரும் ஐயுறல் விடுத்தும் தளர்ந்து பின் வாங்குதல் தவிர்த்தும் இதனை அங்கீ கரித்துடன் அருளுதல் வேண்டும்’ 270 இங்ஙனம் புலவர் இசைத்தது கேட்டுத் துங்க முகமும் துவண்டது; வாயும் மலரா திருந்தது; மற்றவர் நிலையை நோக்கிய புலவர், ‘நோன்பிற் பெரியீர்! ஆக்கிய தவப்பயன் வாய்த்தது போலும், 275 ஒள்வேல் முருகன் உகந்த வெள்வேல், தலத்தின் விருட்சம் ஆகித் தழைக்க அந் நிலத்திடைக் கோவிலும் நிமிர்ந்தெழு மாகின் அளப்பில் தவமே! ஆர்க்கது வாய்க்கும்? மலைத்தல் தவிர்க மற்றுண வுண்டு 280 மாலைப் பொழுதில் வந்தருள் புரிக; என்றதும் சாமிகள் எழுந்து நடந்தனர், மாலை வந்தது மாதவர் வந்திலர், கந்தன் பெயரால் கயிறு திரித்தவர் ‘அந்தர்த் தியானம்’ ஆகினர் அன்றே! 285 |