பக்கம் எண் :

ஊன்றுகோல்89

தங்குதடை யின்றியவர் பேசுங் காட்சி
       தமிழ்பயிலும் அந்நாளிற் கண்ட துண்டு
பொங்குநரை முதுமையொடு பெற்ற பின்பும்
       புதுமையுடன் பசுமையுடன் எமது ளத்தில்
தங்கிஎமை மகிழ்வுறுத்தும் வழியுங் காட்டும்;
       தணியாத தமிழ்க்காதல் ஊட்டி நிற்கும்;
சங்கத்துப் பாடலுக்கு நயங்கள் சொல்வார்
       அடடாஅச் சான்றோர்போல் யாரு ரைப்பார்? 8

எப்பொருளும் எடுத்துரைக்கும் ஆற்றல் மிக்கார்
       எனினுமவர் சங்கத்துப் பாடல் என்றால்
ஒப்பெதுவும் இலைஎன்ன உவகை கொள்வார்;
       உள்ளூறி வருமொழியாற் பொழிந்து நிற்பார்;
எப்பொருளும் கல்லாரும் விளங்கிக் கொள்ள
       எளிதிலதை விளக்குவதை வியவார் யாரே?
அப்பெருநூ லவற்றிடையே அகப்பொ ருட்பா
       அரங்கமர்ந்து கொடுப்பதிலே அவரே ஒப்பார். 9

கேட்டாரை வயப்படுத்தி மகிழ வைத்துக்
       கேளாரும் விழைந்துவர மொழியுஞ் சொல்லர்;
பாட்டாரும் நாநலத்தால் வகைப்ப டுத்துப்
       பயன்விளைய முறைப்படுத்து விளக்குஞ் சொல்லர்;
ஏட்டாலும் பேச்சாலும் மறுத்து ரைக்க
       இயலாத படியுரைக்கும் வெல்லுஞ் சொல்லர்;
நாட்டாரை விரைந்து தொழில் கேட்கச் செய்யும்
       நகரத்தார் குலத்துதித்த இனிய சொல்லர். 10

நாவசையும் மணியொலியைக் கேளா ஊர்கள்
       நமதுதமிழ் நாட்டிலிலை; கரையை நோக்கித்
தாவலைகள் படர்ந்துவருங் கடல்க டந்தும்
       தமிழ்மணியின் ஓசையது கேட்ட துண்டு;
பாவமுது படைக்குமிசை செவிம டுத்தார்
       பாராட்டிப் பாராட்டி அழைப்ப துண்டு;
கோவலர் வாய்க் குழல்போலக் கேட்டார் நெஞ்சைக்
       குளிர்விக்கும் இயல்பிற்றே சொல்லின் வன்மை. 11