தங்குதடை யின்றியவர் பேசுங் காட்சி தமிழ்பயிலும் அந்நாளிற் கண்ட துண்டு பொங்குநரை முதுமையொடு பெற்ற பின்பும் புதுமையுடன் பசுமையுடன் எமது ளத்தில் தங்கிஎமை மகிழ்வுறுத்தும் வழியுங் காட்டும்; தணியாத தமிழ்க்காதல் ஊட்டி நிற்கும்; சங்கத்துப் பாடலுக்கு நயங்கள் சொல்வார் அடடாஅச் சான்றோர்போல் யாரு ரைப்பார்? 8 எப்பொருளும் எடுத்துரைக்கும் ஆற்றல் மிக்கார் எனினுமவர் சங்கத்துப் பாடல் என்றால் ஒப்பெதுவும் இலைஎன்ன உவகை கொள்வார்; உள்ளூறி வருமொழியாற் பொழிந்து நிற்பார்; எப்பொருளும் கல்லாரும் விளங்கிக் கொள்ள எளிதிலதை விளக்குவதை வியவார் யாரே? அப்பெருநூ லவற்றிடையே அகப்பொ ருட்பா அரங்கமர்ந்து கொடுப்பதிலே அவரே ஒப்பார். 9 கேட்டாரை வயப்படுத்தி மகிழ வைத்துக் கேளாரும் விழைந்துவர மொழியுஞ் சொல்லர்; பாட்டாரும் நாநலத்தால் வகைப்ப டுத்துப் பயன்விளைய முறைப்படுத்து விளக்குஞ் சொல்லர்; ஏட்டாலும் பேச்சாலும் மறுத்து ரைக்க இயலாத படியுரைக்கும் வெல்லுஞ் சொல்லர்; நாட்டாரை விரைந்து தொழில் கேட்கச் செய்யும் நகரத்தார் குலத்துதித்த இனிய சொல்லர். 10 நாவசையும் மணியொலியைக் கேளா ஊர்கள் நமதுதமிழ் நாட்டிலிலை; கரையை நோக்கித் தாவலைகள் படர்ந்துவருங் கடல்க டந்தும் தமிழ்மணியின் ஓசையது கேட்ட துண்டு; பாவமுது படைக்குமிசை செவிம டுத்தார் பாராட்டிப் பாராட்டி அழைப்ப துண்டு; கோவலர் வாய்க் குழல்போலக் கேட்டார் நெஞ்சைக் குளிர்விக்கும் இயல்பிற்றே சொல்லின் வன்மை. 11 |