பக்கம் எண் :

90கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8

கதிரேசர் எனும்பெயரைச் சுருக்க மாகக்
       கதிஎன்று கூறுவது வழக்க மாகும்
எதிரேதும் இல்லாத சொல்லின் செல்வர்
       எழிலொழுகுந் தனிநடையர் ரா. பி. சேது
மதிசேரும் பிள்ளையவர் பண்டி தர்க்கு
       மனமுவந்தே பாராட்டு வழங்கும் போது
‘கதிரேச மாமணியார் தமிழ்மொ ழிக்குக்
       கதியாவார்’ எனமகிழ நயமு ரைத்தார். 12

“கனிமொழியால் நாவசைத்துப் பேசுங் காலை
       காப்பியத்துள் இரண்டறவே கலந்து நிற்பார்;
மனமகிழும் காப்பியமே அவரா யிற்று
       மணிமொழியார் காப்பியத்தின் வடிவ மானார்;
தனியுயர்வுக் காப்பியத்தின் அருவித் தோற்றம்
       தனிநடையில் சொற்பொழியும் இவர்தம் தோற்றம்”
எனமொழிந்தார் திரு.வி.க. முருக னுக்கு
       முருகுசெயும் இயல்புடையார் மேலுஞ் சொன்னார். 13

“வண்டிசைக்கும் யாழோசை, குயிலின் பாட்டு,
       வண்ணமயில் எழிலாட்டம், அருவி வீழ்ந்து
கொண்டெழுப்பும் நன்முழவு, பிறவுங் கூடிக்
       கொழிக்கின்ற இன்பத்தைத் தமிழில் தோய்ந்த
பண்டிதரின் மணிமொழியில் நாவு திர்க்கும்
       பாநயத்திற் பெற்றுணர லாகு” மென்று
பண்டையநற் றமிழ்மொழியின் அழகு ணர்ச்சிப்
       பாட்டுக்குப் பொருளான பெரியார்1 சொன்னார். 14

அவையறிந்து பேசுங்கால் பொருள்வி ளங்க
       அளப்பரிய உவமைகளை வழங்கி நிற்பார்;
சுவைபெருக இரண்டுபொருள் கொள்ளும் சொல்லைச்
       சொலிமகிழ்ந்து மகிழ்வளிப்பார்; அந்தப் பேச்சில்
எவர்மனமும் இசைந்திருக்கும்; மறுப்பி ருக்கும்;
       இனிப்பிருக்கும்; எள்ளலுடன் கலந்தி ருக்கும்;
அவர்பேச்சில் தமிழ்மொழியின் மணமி ருக்கும்;
       அவர்மூச்சில் இலக்கியத்தின் நயமி ருக்கும். 15


1.பெரியார் - திரு.வி.க.