பக்கம் எண் :

ஊன்றுகோல்91

பாட்டுக்கு நயமுரைக்குந் திறமே யன்றிப்
       பழையபரி மேலழகன் உரைக்குங் கூடக்
கேட்டுவக்க நயமுரைக்குந் திறமை கொண்டார்;
       கிளர்ச்சிதரும் இவர்பேச்சைச் சுவைத்து ணர்ந்து
கூட்டெழுந்த வேட்கையினால் அரங்கந் தோறும்
       கொலுவிருந்து தலைமையுரை நல்கும் வண்ணம்
நாட்டவர்தாம் நிரல்படவே வேண்டி நிற்பர்;
       நாளெல்லாம் புகழ்பரப்பும் தலைமைப் பேச்சு. 16

கதிரேசர் தலைவரெனுஞ் சொல்லைக் கேட்டால்
       கற்றவரும் பேசுதற்குத் தயங்கி நிற்பர்;
மதிவாணர் பேசுங்கால் தவறு காணின்
       மறுப்புரைக்கக் கண்ணோட்டஞ் சிறிதுங் காட்டார்;
அதனாலே எழுவாரை மட்டந் தட்டல்
       அவர்கொள்கை எனக்கருதல் வேண்டா; பேச்சில்
எதுவேனுங் குறைநேரின் தமிழுக் கன்றோ
       இழிவுவரும் எனுங்கருத்தால் மறுப்பு ரைப்பார். 17

புலவர்தமை இகழ்ந்துரைப்பார் எவரே யாகப்
       பொறுமைகொளார் மறுத்திடுவார் அச்சங் கொள்ளார்;
பொலிவுதரும் பதவியினால் ஓர மைச்சர்
       புலவர்தமை இகழ்வுரையால் எள்ளல் செய்தார்;
‘இலகுதமிழ் ஆசிரியர், 1க.கா. என்ற
       இரண்டுக்கும் மேலொன்றும் அறியார்’ என்றார்;
பலருமவண் கைதட்டி ஆர்ப்ப ரித்தார்;
       பண்டிதமா மணியுமதைப் பார்த்தி ருந்தார். 18

‘அமைச்சர்தரும் மதிப்புரைகள் உண்மை; ஆனால்
       அதற்குமேல் இவர்தெரிந்த பொருள்தான் என்ன?
நமக்குலகில் கடவுளொடு காதல் என்ற
       நற்பொருளை விஞ்சுகிற பொருள்தான் உண்டா?
தமிழ்ப்புலவர், அரசியலில் ஆங்கி லத்தில்
       தனிப்புலவர், இவ்வகையில் யாரும் ஒன்றே;
அமைப்பிதன்மேல் அறியாதார் கூட்டத் துள்ளே
       அமைச்சருந்தாம் ஒருவ’ரெனத் துணிந்து ரைத்தார் 19


1.க - கடவுள். கா- காதல்.