பக்கம் எண் :

ஊன்றுகோல்93

இசைவளர்க்கும் மாநாடு, சமயக் கொள்கை
       எடுத்தியம்பும் மாநாடு, தமிழைக் காத்து
நசைவளர்க்கும் மாநாடு, சங்க நூல்கள்
       நயமுரைக்கும் மாநாடு, கடல்க டந்தார்
இசைவளர்க்கும் மாநாடு, புகழ்ம ணக்க
       எங்கெங்கு நடந்தாலும் தலைமை ஏற்கத்
திசைமுழுக்க இவரைத்தான் அழைத்துச் செல்வர்
       திருமொழியார் ‘தலைமைக்குத்’ தலைமை செய்தார். 24

புலமைக்கு வடிவமெனத் திகழ்ந்த செம்மல்
       போற்றிகொளும் எம் ‘அருணா சலனார்1 ஒர்நாள்
கலைமிக்க ஈழத்துத் திருநாட் டிற்குக்
       கதிரேசர் தம்முடனே சென்றி ருந்தார்
‘புலமைக்குக் கடலிவர்பால் மூழ்கி நின்றும்
       புல்லறிவால் அப்புனலுட் சிறிதே ஏற்றேன்
அலைகடற்குள் நாழியினை அமுக்கி மொண்டால்
       அதுநான்கு நாழிநீர் முகவா தன்றோ?’ 25

என்றுதம தடக்கத்தைப் புலப்ப டுத்த,
       இதுகேட்டு மணிவாயாற் சிலசொற் சொன்னார்;
‘நன்றிசைத்தார் பேச்சாளர் நாழி கொண்டு
       நம்மிடத்து முகந்ததுவுங் கடல்நீர் தானே’
என்றுரைத்தார்; கடற்குரிய தகுதி முற்றும்
       எடுத்தபுனல் தானுமுறும் எனவும் என்பால்
அன்றெடுத்த அப்புனலும் உவர்நீர் என்றும்
       அவர்பெருமை இவர்எளிமை இரண்டுங் கண்டோம். 26

பழையதமிழ் நூலெனினும் சமயம் பற்றிப்
       பகர்கின்ற நூலெனினும் எதுவென் றாலும்
பிழையறவுந் தெளிவுறவும் அவையோர் உள்ளம்
       பீடுறவும் பதிவுறவும் தேர்ந்த சொல்லின்
மழைபொழிவார்; நெடுநேரம் நனைந்தி ருப்போர்
       மனத்தகத்துச் சலிப்பொன்றும் தோன்றா வண்ணம்
நுழைபுலத்தால் நகைச்சுவையுங் குழைத்தெ டுத்து
       நுவன்றிடுவார்;அஃதில்லாப் பேச்சே யில்லை. 27


1.பேராசிரியர் மு.அருணாசலம் பிள்ளை