198 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9 |
முடித்தார்; அந்நூலுக்கு ‘நீதி நூல்’ என்று பெயரிட்டார். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் இந்நூலைப் படித்து மகிழ்ந்து, பாராட்டுக் கவி பாடித் தந்தார். இவ்வாறு வேதநாயகர் நீதி மன்றத்தில் நாயகராக விளங்கியதோடு, மிகச் சிறந்த நீதி நூலூக்கும் நாயகராகி, நீதிநாயகர் என்று அனைவரும் பாராட்டும் வண்ணம் வாழ்ந்து வந்தார். மாயூர வாழ்க்கை இவ்வாறு வாழ்ந்துவரும் நாளில் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் மாயூரத்திற்குச் சென்று தங்க நேர்ந்தது. அவரைப் பிரிந்த வேத நாயகர், நல்ல நண்பரை விட்டுப் பிரிந்திருக்க நேர்ந்ததே என்று வருந்தியிருந்தார். பிரிவால் வாடியிருந்த புலவர் இருவரும் மீண்டும் கூடி வாழும் வாய்ப்பு நேர்ந்தது. கி.பி.1860ஆம் ஆண்டு, வேதநாயகர் மயிலாடுதுறை என்னும் செந்தமிழ்ப் பெயர்பூண்ட மாயூரத்திற்கு நீதிபதியாக மாற்றம் பெற்றார். இவ்வூரில் இவர் பதின் மூன்றாண்டுகள் பணி புரிந்தார்; ஓய்வு பெற்ற பின்னரும் இங்கேயே தங்கி இறுதிவரை வாழ்ந்தார். இவர் குளத்தூரில் பிறந்தார்; திரிசிரபுரம், தரங்கம்பாடி, சீகாழி முதலிய ஊர்களில் பணிபுரிந்தார். ஆயினும் இவர், ‘மாயுரம் வேதநாயகர்’ என்றே அழைக்கப் பெற்றார். அந்த அளவிற்கு அவ்வூருடன் இவர் ஒன்றிவிட்டார். சீகாழியில் பிரிந்த மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் இவர் மீண்டும் மாயூரத்தில் சந்தித்துப் பழகிவந்தார். வேதநாயகர் இவ்வூரில் பதவியேற்ற பின்புதான் நீதிநூலின் இரண்டாம் பதிப்பு வெளி வந்தது. இவர் மகா வித்துவான் அவர்களின் வேண்டு கோளுக்கிணங்கி, மேலும் இருநூறு பாடல் எழுதிச் சேர்த்து, அறுநூறு பாடல்கொண்ட பெருநூலாக அதனை வெளியிட்டார். நீதியிலும் நேர்மையிலும் வழுவாது ஒழுகி வந்தமையாலும், நற்குண நற்செயல்கள் மிக்கிருந் தமையாலும், நூலாசிரியராக விளங்கியமையாலும் மக்கள் இவரைப் பலவாறு போற்றி வந்தனர். இவர் தாம் மேற்கொண்ட பணியைச் செவ்வனே யாற்றிவந்தார். அதனால் உயர்நீதிமன்றத்தாரும் இவரிடம் நல்லெண்ணம் கொண்டிருந்தனர். ஒருவர் எவ்வளவு நல்லவராக நடந்துவந்தாலும் அழுக்காறு கொண்டவர்களால் தீமை உண்டாவது வழக்கமாகி விட்டது. வேதநாயகருக்கும் கீழ்மக்கள் சிலரால் துன்பம் வந்து சேர்ந்தது. |