ஒருநாள் அவ் யானைக்கு மதம் பிடித்து விட்டது. அதனைப் பாரதியார் அறியார்; வழக்கம் போல் தேங்காய், பழம் கொடுத்தார். யானை அவற்றை வாங்கிக் கொள்ளாமல் அவரையே தூக்கி எறிந்தது. தூக்கி எறியப்பட்ட பாரதியார் யானையின் கால்களுக்கு இடையே வீழ்ந்தார். வீழ்ந்தவரை யானை அடையாளம் கண்டு கொண்டது போலும்; கண்ணீர் வடித்தது; ஆடாமல் அசையாமல் அப்படியே நின்றது; வீழ்ந்த பாரதியார் மயக்கமுற்றார். அங்கிருந்தோர் யாரும் அவர்பால் நெருங்கவில்லை. எப்பொழுதும் பாரதியார்க்கு உதவும் குவளைக் கண்ணன் அப்பொழுது கால் களுக்கிடையே புகுந்து ஒரு குழந்தையைத் தூக்கி வருவது போலப் பாரதியாரைத் தூக்கி வந்தார். மருத்துவ உதவிக்குப்பின் பாரதியார் ஓரளவு குணமானார். பாரதியார் சிறிது குணமடைந்தாலும் தூக்கி எறியப்பட்டு வீழ்ந்த அதிர்ச்சியினால் அவர்க்கு வயிற்றுக் கடுப்பு நோய் வந்துற்றது. மருத்துவம் பார்த்தும் பயனில்லை. 11-09-1921இல் பாரதியார் உயிர் நீத்தார். தனது ஆற்றலும் இனிமையும் நிறைந்த குரலால் விடுதலைப் பண்ணிசைத்த வீரக்குயில் இம் மண்ணைவிட்டே விடுதலை பெற்றுவிட்டது. குயிலின் குரல் ஒடுங்கிவிட்டாலும் அக் குரலி லிருந்து எழுந்த பாடல்களின் கருத்து ஒன்றாய், இரண்டாய், நூறாய் வளர்ந்து மக்கள் உண்மையான விடுதலை பெறத் துணை செய்யும் என்பதில் ஐயமில்லை. |