பக்கம் எண் :

104கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11

நாட்டு மன்னன், பிசிராந்தையார் பாண்டியநாட்டுப் புலவர். இருவர்க்கும் இடையே இருந்த இடைவெளி மிகப் பெரியது; ஒருவரை யொருவர் கண்டு பழகாதவர்கள். ஒருவன் மன்னன்; மற்றவர் புலவர். செல்வத்தால் ஏற்பட்ட இடைவெளியும் மிகமிகப் பெரிது. ஆயினும் உயிரையும் கொடுக்க வல்ல ஒப்பற்ற நண்பராக விளங்கினர். அந்நட்புக்கு, ஒத்த வுணர்ச்சியே காரணமாக இருந்தது.

ஒருவரிடம் நட்புக் கொள்ளுமுன் அவருடைய இயல்புகளை நன்கு ஆராய்ந்து, அதன் பின்னரே கொள்ளுவதுந் தள்ளுவதுஞ் செய்தல் வேண்டும். முதலில் நன்கு ஆராய்ந்து பாராது நட்புக் கொள்ளுவது போலக் கேடு பயப்பது வேறொன்றில்லை. நட்புச் செய்த பின், அதனை விட்டு விடுவதென்பது எளிதன்று; ஆதலின் முன்பே ஆய்ந்து கொள்க நற்குடிப் பிறப்பும், பழிக்கஞ்சும் பண்பும், மாசற்ற மனமும் உடையவர்பால் நட்பாடல் வேண்டும். இவர்தம் நட்பை எத்தகைய விலை கொடுத்தாயினுங் கொள்ளுதல் வேண்டும். தோற்றத்தையும் வெளி வேடத்தையும் கொண்டு நம்பி விடுதல் கூடாது. உள்ளத்தைக் கொண்டே ஓர்ந்துணர்தல் வேண்டும். யானை, தோற்றத்தாற் பெரிது; நாய், உருவிற் சிறிது. எனினும் யானையனையவர் நட்பு விலக்கற்பாலது. நாயனையவர் நட்பே வேண்டற்பாலது. யானை, பழகிய பாகனையே கொன்று விடுகிறது. நாய், தன்னை வளர்த்தவன் அடித்தாலும் துரத்தினாலும் அவனை விட்டகலாது. சுற்றிச் சுற்றி வருகிறது. ஆதலின் நன்றியுள்ளங் கொண்டவரிடத்தே தான் நட்பாடல் வேண்டும்.

நன்றியுணர்வும், நற்பண்பும் இல்லாரிடம் நட்புச் செய்தல் கூடாது. அத்தகையவர் தொடர்பை ஒன்று கொடுத்தாயினும் விட்டு விடுதல் வேண்டும். இன்பத்தில் துணையாவார் போலக் கூடி வாழ்ந்து, துன்பத்தில், விட்டு நீங்கும் இயல்புடையாரை நண்பராகக் கொள்ளுவதை விடத் தனிமையே சிறந்தது. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்தம் தொடர்பு, கனவின் கண்ணும் இன்னாத தாகும். சொல்லொன்றும் செயலொன்றுங் கொண்டார் நட்பு, உன்னைச் சிறிதும் அணுகாமல் காத்துக் கொள்ள வேண்டும். சிலர், உன்னைக் கண்ட பொழுது, பணிந்து, வணங்கிய சொற்களைப் பகருவர். தோற்றத்தில் பணிவும், சொல்லில் வணக்கமும் இருப்ப தால் நம்பி விடுதல் கூடாது. பகருவோன் எத்தகைய பண்பினன் என ஆய்ந்து பார்த்தல் வேண்டும். வில்லும் வளையத்தான் செய்கிறது.