118 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11 |
வைகறைப் பொழுதில், துயிலெழக் கற்றுக்கொள்ள வேண்டும். அஃது உடலுக்கு மிகவும் நல்லது; உள்ளத்துக்கும் புத்துணர்ச்சி தரும்; முகம் மலர்ச்சியாக விளங்கும்; சுறுசுறுப்பைக் கொடுக்கும். எழும்பொழுது தாய் தந்தையரைத் தொழுதெழ வேண்டும்; அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வமல்லவா? தாயிற் சிறந்த கோவிலும், தந்தை சொல்மிக்க மந்திரமும் உலகில் உண்டோ? அதனால் அத்தெய்வத்தைத் தொழுதெழ வேண்டும். எழுந்தவுடன் அன்று தாம் செய்ய வேண்டிய அறங்கள், செயல்கள் முதலியன வற்றைச் சிந்தித்து, வரையறை செய்துகொள்ள வேண்டும். இவ்வா றொழுகின் வாழ்வில் சிறந்த வெற்றி பெறவியலும். இத்தகைய நல்லொழுக்கங்களைத் தேர்ந்தெடுத்து நடக்கக் கற்றுக்கொள். ஒழுக்க நெறிகளினின்றும் வழுவாது, நாடோறும் அந்நெறி களில் ஒழுகி வரும் ஒருவன், நற்குடி மகனாக விளங்குவான்; நெடுங்காலம் நல்வாழ்வு வாழ்வான்; நோயின்றி வாழ்வான்; செல்வம், வனப்பு, நிலவுரிமை, புகழ், கல்வி முதலிய பேறுகள் அனைத்தும் பெற்று விளங்குவான். ஆதலின் நல்வாழ்வு வாழ, ஒழுக்க நெறிகளில் நட; ஒரு சிறிதும் வழுவாது நட. "ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்". இங்ஙனம் அறிவுடைநம்பி. |