பக்கம் எண் :

12கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11

3
ஒழுக்கம் ஓம்பு

அன்புள்ள அரசு,

உன் கடிதம் கிடைத்தது. பாடங்களை ஒழுங்காகப் படித்து வருவதாக எழுதியிருப்பது கண்டு மகிழ்வெய்துகிறேன். உடல் நலனை நன்கு பேணி வைத்துக் கொள். உடம்பை எப்பொழுதும் தூய்மையாக வைத்துக்கொள். உடம்பு தூய்மையாக இருப்பின் உள்ளமும் தூய்மைப்படும். பாடங்கள் மனத்தில் நன்கு பதிய - பதிந்தவை மறவாதிருக்க உடற்றூய்மை உறுதுணை செய்யும்; நினைவாற்றலுக்கு அது நன்மருந்து. வைகறைத் துயில் எழுதலும் இளங்காலையில் நீராடலும் அதனைத் தரவல்லன. இவ்வொழுக்கங் களில் மிகவும் உன்னிப்பாக இருத்தல் வேண்டும்.

எல்லாராலும் எளிதாகக் கடைப்பிடிக்க முடியாதது ஒழுக்கம் என்று சிலர் எண்ணுவர். இன்னும் சிலர், இல்வாழ்வானுக்குத்தான் ஒழுக்கம் வேண்டப்படுவது என்றுங் கூறுவர். ஒழுக்கத்திற்கு அவ்வாறு வரையறை கூறுவது தவறு. அவ்வாறாயின் மற்றையோர்க்கு எவ்வாறு ஒழுக்கம் வாய்க்கும்? துயில் எழுதல் முதல் துயிலச் செல்லும் வரை நிகழும் ஒவ்வொரு செயலிலும் ஒழுக்கம் விரவி நிற்கின்றது. இன்ன இன்ன செயலை இன்னின்னவாறு ஆற்றுவதென வரையறுத்துக் கொண்டு நாடொறும் வழுவாது ஒழுகி வருவதுதான் ஒழுக்கம். அவ்வொழுக்கம் வழுக்கினால் இழுக்கம் ஏற்படும். இழுக்கத்திற்கு இடங்கொடாதே. எழுதல், நீராடல், உண்ணல், உறங்கல், உடுத்தல், படித்தல், பேசல், பழகல் இவ்வனைத்திலும் ஒழுக்கம் உடையவனாக இரு. இருப்பின் நல்வாழ்வு உன்னைத் தேடிவந்தடையும். விழுப்பமும் நல்கும். ஆதலால் ஒழுக்கத்தை உயிரினும் மேலாகக் கருதிக் காத்துக் கொள்.

ஆசிரியர்கள் பாடம் நடத்தும் முறை பற்றி எழுதியிருந்தாய். ஆசிரியர் பலரைப் பாராட்டி எழுதியிருந்தாய். ஓரிருவர் கற்பிக்கத்