இடையிடையே வந்து துன்புறுத்தும் பிணிகளோ மிகப் பலவாம். சிற்றறிவுடைய மனிதன், சிறிய வாழ்நாளில் - பல்வகைப் பிணி களிடையே - கரையில்லா நூற்கடலை எவ்வாறு கடந்து கடைத் தேறுவது? இயலாதல்லவா? அதனால் கற்கத் தகுந்த நூல்களை - உறுதிப் பொருள்களை உணர்த்தும் நூல்களை அறிவையும் பண்பை யும் வளர்க்கும் நூல்களைத் தேர்ந்தெடுத்துப் பயிலவேண்டும். 'கண்டது கற்கப் பண்டிதனாவான்' என யாரோ சொன்ன கூற்றை நம்பிக் காலத்தைப் பாழ்படுத்தி விடுதல் கூடாது. இன்று, நூல் என்ற பெயரளவில் நம் நாட்டில் வண்ண வண்ண ஏடுகள் பல்கி வருகின்றன. அவற்றை விழைதல் தகாது. கண்டது கற்கப் பண்டிதன் ஆவான் என்றால் கண்ணாற் காணும் பொருள்களிலிருந்து, சில உண்மை களைக் கற்றுக் கொள்பவன் பண்டிதன் ஆவான் என்பது பொருள். கலை நுட்பங்கள் அயல்நாடுகளில் விண்முட்ட வளர்ந்து வருகின்றன. அவ் வளர்ச்சிகளையெல்லாங் கண்ட பின்னும் நாமும் அவர் களைப் போல ஆகவேண்டும் என்ற ஆர்வமாவது வளரவேண்டாவா? உயர்கலைகள் தோன்ற வேண்டும் என்ற எண்ணமும், அத்தகு நூல்களையே பயிலவேண்டும் என்னும் ஆர்வமும் முதலில் வளர வேண்டும். பயிலத்தக்க நூல்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றை ஐயந்திரி பறக் கற்கவேண்டும். இதுவோ அதுவோ என்ற ஐயப்பாடும், ஒன்றை மற்றொன்றாகக் கருதும் திரிபுணர்வும் இருப்பின் எவ்வளவு நூல்களைக் கற்பினும் பயனேயில்லை. கல்வியில் அகலமும் வேண்டும்; ஆழமும் வேண்டும். அஃதாவது மிகுந்த பயிற்சியும் கூர்த்த அறிவும் வேண்டுமென்பது. கற்கத்தக்க நூல்களைக் கற்றோம்; கசடறக் கற்றோம் என்ற அளவில் இருந்தால் மட்டும் போதாது. என்ன கற்றோம்? எப்படி வாழ வேண்டும் என்று கற்றோம்? உயர்வுக்குரிய வழிகளென எவற்றைக் கற்றோம்? என்று சிந்தித்து, அந்நெறிகளில் வழுவாது நின்றொழுகவேண்டும். அவ்வாறொழுகக் கற்றவனே கல்வியாளன் என்று கருதப்படுவான். கல்வியின் பயன் ஒழுக்க மாகும். அவ்வொழுக்கம் இல்லையாயின் கல்வியால் அடையும் பயன்தான் யாது? கல்வி கற்கும் பொழுது ஆசிரியர்க்கும் மாணவர்க்கும் உள்ள தொடர்பு, எவ்வாறிருக்க வேண்டுமென்பதையும் எழுதுவது நலம்பயக்கும் என்று கருதுகின்றேன். இக் காலத்தே ஆசிரியர்கள் |