பக்கம் எண் :

142கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11

12
நன்றி மறவேல்

அன்புள்ள பாண்டியனுக்கு,

நலம். உன் கடிதம் கிடைக்கப் பெற்றேன். 'நாட்டுப் பற்றென் றால் என்ன என்பதைப் புரிந்து கொண்டேன்; அரசியலில் ஈடுபட்ட வர்க்குத்தான் அப்பற்று வேண்டுவது என இதுவரை எண்ணி யிருந்தேன்; உங்கள் கடிதத்தைப் படித்த பிறகே உண்மையை உணர்ந்து கொண்டேன். மேலும் நாட்டுப் பற்றுடையார், எவ்வெவ் வாறு செயற்பட வேண்டும் என்பதையும் புரிந்து கொண்டேன்' என்றெழுதியிருக்கிறாய். நாட்டுப் பற்றைப் பற்றி மக்களிடையே நன்கு விளக்கிக் கூறாமையாற்றான், விடுதலை பெற்றுப் பல ஆண்டுகளுக்குப் பிறகும் நாம் இந்நிலையில் இருக்கின்றோம்.

அரசியலில் ஈடுபட்டவர்க்கு மட்டுந்தான் நாட்டைப் பற்றிய அக்கறை இருக்கவேண்டும் என்ற தவறான எண்ணம், நம்மிடையே இருந்து வருவதால் பெருந்தீங்குகள் நேர்ந்து விடுகின்றன. நாம் வேறு, நாடு வேறு என்று எண்ணி விடுதல் கூடாது. 'நாடென்பது வெறும் பூகோளப்படம் அன்று; அங்கு வாழும் மக்களின் உணர்ச்சித் தொகுப்பு' என்று அறிஞர் கூறியிருப்பது இங்கு நினைவிற் கொள்ளத் தக்கது.

பள்ளியிற் பயிலும் மாணவர்க்கும் நாட்டுப் பற்று வேண்டும். அவர்தம் நிலைக்கேற்பச் செயல்முறைகளில் ஒழுகுவதுதான் நாட்டுப்பற்றாகும். எடுத்துக்காட்டாக ஒன்றிரண்டு வரைகின்றேன். முதலில் மாணவர் தாம் பயிலும் பள்ளியில் பற்றுடையவராக விளங்கவேண்டும். பள்ளிச் சுவர்களைக் கண்டபடி எழுதிப் பாழ் படுத்துதல் கூடாது; வகுப்பறைகளிலுள்ள தடுப்புப் பலகைகளையும் தட்டி களையும் தகர்ப்பதும் சிதைப்பதுங் கூடாது; இருப்புப் பலகைகளின் உறுப்புகளை உடைத்துத் துண்டு துண்டாக ஒழித்துக் கட்டுவதுங் கூடாது, தெருவழியில் நிற்கும் விளக்குக் கம்பங்