பக்கம் எண் :

150கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11

கருத்துகளை எளிய நடையில் பேசுவது முறையோ? இளைஞர் முன்னிலையில் அரிய கருத்துகளைக் கூற நேரினும், அவற்றை எளிமையாக்கி நகைச்சுவையுடன் கலந்து அவருள்ளங் கொள்ளும் வகையில் பேச வேண்டும். ஆராய்ச்சிக் கருத்துகளை அவர் முன்னிலையில் பேசுவது முறையன்று. இதுதான் அவையறிந்து பேசுவதாகும்.

இவ்வண்ணம் தன் திறனும் அவையின் திறனும் அறிந்து ஒன்றைச் சொல்லுங்கால் அதனினும் மேம்பட்ட அதனை வெல்லத் தக்க வேறோர் சொல் இல்லாத வகையில் ஆய்ந்து சொல்ல வேண்டும். அஃதாவது உயர்ந்த கருத்துகளை, அனைவரும் ஒப்புக் கொள்ளும் வகையாற் கூற வேண்டும்; அவற்றினுஞ் சிறந்ததாகப் பிறிதொன்றை மற்றையோர் எடுத்துக் கூறா வகையால் அனைத் தினுஞ் சிறந்ததைத் தான் எடுத்துக் கூற வேண்டும் என்பதாம். அவைக்கு அஞ்சாமலும், கற்றார் பலராகக் கூடியிருப்பினும் ஒன்றையும் மறவாமலும், பிறர் ஏற்கும் வகையாற் சொல்லுதலில் வல்லவனாகிய ஒருவனை எவராலும் வெல்ல முடியாது. இத்தகை யான் சொல்லை வெல்லுஞ் சொல் ஒன்றும் இல்லையாகிவிடும். இவன் சொல்லே வெற்றி கொண்டு நிற்கும் என்பதாம்.

சொல்வன்மை, உலகத்தையே தன்வயப்படுத்திக் கொள்ளும் பேராற்றல் கொண்டதென்று தொடக்கத்தில் எழுதினேன். சொல் வன்மையைக் கையாளும் முறையிற்றான் அவ்வாற்றல் அமைந்து கிடக்கிறது. உலகில் யார் யாரோ பேசுகின்றார்கள்; அவருடைய சொல்லுக்கெல்லாம் இந்த ஆற்றல் இருக்கின்றதா? இல்லை; ஒரு சிலர் சொல்லுக்கே அவ்வாற்றல் அமைந்திருக்கிறது. அவர், தாம் சொல்ல வேண்டியவற்றை முன் கூட்டியே சிந்திக்கின்றனர். சிந்தித்து இன்னின்னவற்றைக் கூறவேண்டும் என்று முடிவு செய் கின்றனர். முடிவு செய்து, அவற்றுள் முதலிற் கூறுவேண்டி யவை எவை, அடுத்துக் கூறவேண்டியவை எவை, இறுதியிற் கூற வேண்டி யவை எவை என்று எண்ணிப் பார்த்து, அவற்றை நிரல்படக் கோத்து வைத்து, அம்முறைப்படி சொல்லுகின்றனர். முறைப்படுத்திச் சொல்லும் பொழுதும் கேட்டார்க்கு இன்பம் பயக்கும் வண்ணம் இனிதாகச் சொல்லுகின்றனர். இவ்வாறு நிரல்படக் கோத்து, இனிதாகச் சொல்லும் அறிஞர் பெரு மக்களுடைய சொற்களை, கருத்துகளை உலகம் விரைந் தேற்றுக் கொள்ளுகிறது. அவர் சொல்லின் வழி உலகம் நடக்கவுஞ் செய்கிறது.