பக்கம் எண் :

18கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11

இன்னும் சின்னாள் தங்கியிருப்பின் அவ்வலி அறவே நீங்கப் பெற்றிருப்பேன். ஆனால் நான் ஏற்று நிற்கும் பொறுப்பு, கடமை அங்கே தங்கவிடவில்லை. ஊருக்குத் திரும்பினேன்.

பொறுப்புள்ள - நாட்டுக்கு நன்மை தரத் தக்க, நாட்டின் உயர்வுக்கே உயிர் நாடியான அலுவல்களில் ஈடுபட்டிருப்போர் நோய்வாய்ப்படின் அந்நோய் நீக்கத்துக்காக ஓரிரு திங்கள் விடுப் பளித்து, அவர்களைக் குற்றாலம் போன்ற உடல்நல நிலையங் களுக்கு உய்த்து வேண்டிய உதவிகளும் செய்து தர நம் அரசியலார் முயல்வாராயின் நாட்டுக்குப் பெரும் நன்மையாகும். இவ்வாறு செய்யின் அம் மக்கள், இழந்த வலிவை மீட்டும் பெற்று, அப்பணியில் நன்கு உழைப்பதற்கு வாயிலாக இருக்கும். அந்நாள் எந்நாளோ?

என்னைத் தொல்லைப்படுத்தி வந்த நோய் நீங்கி, இன்பம் பெற்றமையாற்றான் பெரும்பயன் பெற்றேன் என்று எழுதினேன். மேலும் எத்தனைப் பேர் நான் கூறிய இயற்கைக் காட்சிகளைக் கண்டு, எழில் நலம் நுகர்ந்திருப்பர்? பெரும் பகுதியும் இரார் என்றே எண்ணுகின்றேன். பெருஞ்செல்வரே மிகுதியும் செல்கின்றனர். ஏதோ நீராடி விட்டு, நல்லுணவு உண்டு, களியாட்டம் ஆடிக் காலத்தைக் கழித்து மீள்கின்றனர். அவர்தம் செல்வச் செழிப்பைக் காட்டிக் கொள்ள வருகின்றனரே அன்றி, இயற்கை இன்பத்தில் திளைக்க வருவதாகத் தோன்றவில்லை.

இன்னுஞ் சிலரோ 'புண்ணியத் தலம் போய் வந்தோம்; நம் பாவங்களைக் கழுவி விட்டு வந்தோம்' என்று புண்ணிய பாவக் கணக்குப் போடுவர். இன்னுஞ் சிலர் நிலைதான் இரங்கத் தக்கது. அருவியில் நீராடுவதைப் புண்ணியத் தீர்த்தத்தில் நீராடுவதாக எண்ணிக் கொண்டு தலையை மட்டும் அருவியிற் காட்டி உடனே இழுத்துக் கொண்டு ஓடி வந்துவிடுகின்றனர். நல்ல வேளை! கையில் சிறிது எடுத்துத் தலையில் தெளித்துக் கொள்ளாமல் தலையையாவது நனைக்கின்றார்களே! சிலர் ஒருநாள் மட்டும் நீராடி மீள்கின்றனர். இவரெல்லாம் புண்ணிய நோக்கத்திற்காகச் செல்வோர். நோக்கம் தவறென்று சொல்ல வரவில்லை. இவர்தம் அறியாமையைக் கண்டே இரங்குகின்றேன்.

ஒருநாளில் என்ன பயன் காணல் கூடும்? இவர்களைப் பெரும் பயன் பெற்றார் என்று எவ்வாறு கூறுதல் இயலும்? ஆகவேதான்