இதுவும் பெரிய அருவியே. ஆனால் நீராடற் கேற்ற அமைப்புகள் இல்லை. முன்பு அமைத்திருக்கிறார்கள். அருவியின் விசையால் அவ்வமைப்புகள் சிதறுண்டு காணப்படுகின்றன. ஆதலின் நீராட இயலாது. அருகில் சிறு கோவிலும் அம்மன் சிலையும் காணப்படு கின்றன. சண்பகா தேவி என்ற அம்மன் அருகில் இருப்பதால் இவ்வருவி சண்பகாதேவி அருவி எனப் பெயர் பெற்றதோ என்று ஐயுற்றேன். ஆனால் சிறிது நேரத்தில் ஐயம் நீங்கப் பெற்றேன். அவ்விடம் சண்பக மரங்கள் நிறைந்த காடாக முன்பு இருந்திருக் கிறது. அதனால் அவ்விடத்தைச் சண்பக அடவியென்றழைத்தனர். அடவி என்னுஞ் சொல்லுக்குக் காடு என்னும் பொருளுண்டு. சண்பக அடவி நாளாக நாளாகச் சண்பகாடவி என்றாகிப் பின்னர்ச் சண்பகாதேவியாக மருவிவிட்டது. கடவுளைப் படைப்பதில் நம் மக்கள் வல்லவரகளல்லவா? தேவியும் தோன்றிவிட்டாள். உண்மைப் பெயர் சண்பக அடவி என்பதுதான். இங்கே வீழும் அருவி சண்பக அடவி அருவி என்று பெயர் பெற்று மக்கள் பக்திப் பெருக்கால் சண்பகா தேவி அருவியாக மாறிவிட்டது. இந்த அருவியிலிருந்து இன்னும் மேலேறிச் செல்வோர் தேனருவியை அடைவர். இங்குச் செல்வதுதான் அரிதாகும். எல்லாரும் எளிதிற் செல்ல இயலாது. வெயில் நுழைபறியாக் காட்டுவழி. அவ்வழியும் ஒருவர்பின் ஒருவராகச் செல்லுமாறு அமைந்தது. சிறிது தவறினால் சரிவுகளில் எங்காவது முட்புதர் களிலே சென்றுதான் தங்க முடியும். தங்கினால் நாம் மீண்டும் இவ்வுலகைக் காண இயலாது. பெரும் பெரும் பாறைகளையெல்லாம் கடந்து செல்ல வேண்டும். தாண்டித் தாண்டிச் செல்ல வேண்டும். தாண்டும் பொழுது சிறிது வழுக்கினால் அருவியில் வீழ்ந்து, எலும்புகள் ஒடிந்து சிதறி விடுவோம். மிகவும் உன்னிப்பாகச் செல்லுதல் வேண்டும். நாங்கள் ஒருவர்பின் ஒருவராகத் தாண்டிச் சென்றோம். நடந்து செல்ல இயலாது. தாண்டித் தாண்டித்தான் செல்ல இயலும். ஒவ்வொரு பாறையிலும் தாவிக் கொண்டிருக்கும் பொழுது, சரிவுகளின் மரக்கிளைகளில் குரங்கினங்களும் தாவித் தாவிச் செல்லும் காட்சியையும் கண்டோம். இரு திறத்தாருக்குத் தாவுதல் போட்டி நடப்பது போல் இருந்தது. வெற்றி நம் முன்னோருக்குத் தான். |