| 48 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11 |
எனக் குமரகுருபரர் கூறுவதிலிருந்து சிவபெருமான் குடும்பமே தமிழை விரும்பும் குடும்பம் எனத் தெரிந்து கொள்கிறோம். சிவன், சவுந்தரமாறனாகவும், உமை தடாதகா தேவியாகவும், முருகன், உக்கிரகுமார பாண்டியனாகவும் மதுரையில் தோன்றிய காரணம் தமிழ்ச் சுவையைக் குடும்பத்துடன் கூடியுண்ண வேண்டும் என்ற வேட்கைதான் என்பது அப்பாடலின் பொருள். மேலும், முருகப் பெருமானைப் பற்றி, முத்தமிழால் வைதோரையும் வாழ வைப்பவன் என்று குறிப்பிடுவர் ஆன்றோர். தமிழால் வைதோரையே வாழ வைப்பவன் என்றால் தமிழால் வாழ்த்துவோரை வாழவைக்காமல் விடுவானோ? மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழில் மீனாட்சியைக் குறிப்பிடும் பொழுது, "தொடுக்கும் கடவுட் பழம்பாடல் தொடையின் பயனே! நறைபழுத்த துறைத்தீந் தமிழின் ஒழுகு நறுஞ்சுவையே" என்று குமரகுருபரர் குறிப்பிடுகின்றார். இந்நூலைத் திருமலை நாயக்கர் முன் அரங்கேற்றும் பொழுது, மீனாட்சியம்மை குழந்தை வடிவில் வந்து, மன்னன் மடியில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்ததாக உரைப்பர். தேவாரம் பாடிய மூவரும் அந் நூல்களை எம்மொழியிற் பாடினர்? மாணிக்க வாசகர் மொழிய, இறைவனே நேரில் வந்திருந்து எழுதியதாகச் சொல்லப்படும் திருவாசகம் எம் மொழியில் எழுதப் பட்டது? கோபுரத்திலிருந்து வீழ்ந்த அருணகிரியை ஓடிவந்து காப்பாற்றிய முருகன் புகழ்பாடும் திருப்புகழ் எந்த மொழியில் எழுதப்பட்டது? இவற்றை யெல்லாம் கடவுளர் விரும்பவில்லையா? ஏற்றுக்கொள்ள வில்லையா? ஏற்றுக்கொண்டனர் என்று அந்த அடியவர் கூட்டந்தானே நமக்குச் சொன்னது. இவ்வாறு கூறிவிட்டு, இப்பொழுது, தமிழைக் கேட்டால் கடவுளர் செத்து விடுவர் என்றால், இது கடவுளர் மீது கொண்ட பற்றா? தமிழ் மீது கொண்ட வெறுப்பா? அன்றி ஏமாற்று வித்தையா? நன்கு ஆய்ந்து ஒரு முடிவு செய். உன் தந்தை முடியரசன். |