பக்கம் எண் :

முடியரசன் கடிதங்கள்51

'அய்யா! நீங்கள் யார்? சித்து விளையாடல் செய்பவரா? என் முதுமையை ஏன் மாற்றினீர்? பிறவியைக் கடக்கும் எல்லையில் இருந்த என்னை மீண்டும் தொடக்க நிலைக்குக் கொண்டு வந்து வீட்டீர்களே! அருள்கூர்ந்து விவரமாக அனைத்தும் கூறியருளுங்கள்' என்று வணங்கி வேண்டி நின்றாள்.

'அம்மையே' அறிதுயிலமரும் ஆண்டவன் பால் அன்பு கொளும் ஆழ்வாருள் ஒருவன் யான், திருமழிசை ஆழ்வார் என்று என்னை அழைப்பர். ஆண்டவனுக்குப் பணி பூண்டொழுகும் நினக்கு முதுமை கூடாது என்பதால் இளமையருள இறைவனை வேண்டினேன்; அவனும் அருளினன்' என்று கூறிக்கொண்டே நடந்துவிட்டனர் ஆழ்வார்.

*******

'அமைச்சரே! தொண்டை நாட்டில் இதுவரை கேள்விப் படாத விந்தையாக இருக்கிறதே! மூதாட்டி குமரியாவதா? இது பொய்யா? புனைந்துரையா? முன் பெல்லாம் காயகற்பம் உண்டால் இளமை திரும்பும் என்று சொல்வார்கள். இவள் அப்படியொன்றும் மருந்து சாப்பிட வில்லையாம். ஒரே ஒரு பாட்டால் அதுவும் தமிழ்ப்பாட்டால் முதுமை மாறி இளமை பெற்றாளாமே!' இது பல்லவன் வினா.

'பல்லவ மன்னரே! ஆம்; உண்மைதான், ஆழ்வார் பாடல் அருள்வலியுடையது; ஆக்கவும் அழிக்கவும் வல்லது. அப்பெண்மணியை நானே நேரில் பார்த்தேன். கட்டுக்கதை யன்று; கடவுள் திருவருள்' என அமைச்சர் விடை தந்தார்.

'அப்படியா! பெருமகிழ்ச்சி அமைச்சரே! நாம் முதுமை யால் தளர்ந்து கொண்டு வருகிறோம். அதை நினைந்து நினைந்து கவலைக்கு இலக்காகிறோம். நாட்டையும் நாட்டு மக்களையும் நினைத்து நாம் மீண்டும் இளமை பெற விழைகிறோம். எம் முதுமை, நாட்டின் ஆட்சிக்குச் சிறிது இடையூறாக உள்ளது. அதனால் ஆழ்வாரை எம்மீதும் ஒரு பாடல் பாடும்படி ஆவன செய்வீராக' என்றான் அரசன்.

'தொண்டை மண்டல வேந்தே! ஆழ்வார் விரும்பினால் தான் பாடுவார். நம்முடைய வேண்டுகோளுக்கோ, ஆணைக்கோ அவர் பாடுவதென்பது அரிது என்று கேள்விப்பட்டிருக் கின்றேன்.