பக்கம் எண் :

56கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11

காவலன் கணிகண்ணனிடம் ஓடினான். பெரியீர்! அறியாது பிழைபுரிந்தேன். சிறியேன் செய்த பிழையைப் பொறுத்தருள வேண்டும். நாட்டுக்காக நாட்டு மக்களுக்காகத் தாம் திரும்பியருள வேண்டுகிறேன்' எனக் கண்ணீர் மல்கக் கெஞ்சி நின்றனன்.

"மன்னவ! தமிழைப் பிழைத்த நாடு - தமிழைப் புறக்கணித்த நாடு எவ்வளவு தொல்லைகளுக்கு ஆளாகி விட்டது பார்த்தாயா? இனியேனும் தமிழைப் பழிக்காதே! தமிழ்ப்புலவனை இகழாதே! இப்பொழுது நீயே குற்றம் உணர்ந்தனை. நான் நாடு திரும்புகின்றேன். "இணர் எரி தோய்வன்ன இன்னா செயினும், புணரின் வெகுளாமை நன்று' என்பதை உணர்ந்ததால் உன்னை நான் வெறுக்கவில்லை. வா, காஞ்சிக்குச் செல்வோம்' என்று கூறினன் கணிகண்ணன்.

மன்னன் மனம் மகிழ்வால் குதித்தது. மகிழ்ச்சிக் கண்ணீர் துளித்தது. மீண்டும் வணங்கிப் பணிவன்போடு அழைத்துச் சென்றனன்.

ஆழ்வாரும் அகமுருகி, அருகில் நின்ற மாயோனைப் பார்த்தார். மாயன் புன்முறுவல் பூத்தனன்.

"கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங் கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டும் - துணிவுடைய
செந்நாப் புலவன்யான். செல்லொழிந்தேன் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய்விரித்துக் கொள்."

என்று பழைய பாட்டைச் சிறிது மாற்றிப் பாடினர் ஆழ்வார்.

மாயவனுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. காஞ்சிக்குத் திரும்பினார். அப்பாடா என்று பெருமூச்சு விட்ட வண்ணம் படுக்கையில் சாய்ந்தவர்தான். இன்னும் அவர் எழுந்திருக்கவில்லை.

இந்நிகழ்ச்சியை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் என்ற நூலில் 'பைந்தமிழ்ப் பின் சென்ற பச்சைப்பசுங் கொண்டலே' என்று நம் குமரகுருபரர் அழகாக எடுத்தோதுகின்றார். அதனால் எல்லாக் கடவுளரும் தமிழை விரும்புகின்றனர் என்பது புலனாகிறது. கடவுளர் தமிழை வெறுக்கவில்லை. போலி பக்தர்கள் தாம் புலம்புகின்றனர்.

உன் தந்தை
முடியரசன்.

