பக்கம் எண் :

6கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11

நீ எந்த மாணவரொடும் பகையுணர்ச்சி கொண்டு பழகாதே. இன்றைய நிலையில் பகையுணர்ச்சி வளரத்தக்க சூழ்நிலை இருந்து வருகிறது. சாதி, சமயம், அரசியல் எத்துறையிலும் பகையுணர்வே தலை தூக்கி நிற்கிறது. அப்பகையுணர்வு அறவே கூடாது. கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் மாறுபாடு இருத்தல் ஆகாது. நாங்கள் படிக்கும் பொழுது சாதி, மதம், அரசியல், கொள்கை இவற்றால் வேறுபட்ட எத்தனையோ பேர் கலந்து படித்தோம். ஆயினும் எம்மிடையே பகையுணர்ச்சி இருந்ததே கிடையாது. நட்பு, பழகும் முறை அந்நிலையில் இருந்தன எங்கள்பால்.

நம் நாட்டுத் தலைவர்கள் சொற்களை, வரலாற்றைக் கேட்கும் பொழுதும் படிக்கும் பொழுதும் நாமும் அவ்வாறிருத்தல் வேண்டும் என்று ஆர்வங் கொள்ள வேண்டும். திரு.வி.க. அவர்களைப் பற்றி உனக்குச் சொல்லியிருக்கிறே னல்லவா? அப்பெருந்தகை, பெரியார் இராமசாமி அவர்களைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது, ‘அவரையும் (ஈ.வெ.ரா) என்னையும் நண்ப ராக்கியது அரசியல் உலகம். அவரும் யானும் ஒரு போது ஒன்றிய கருத்துடன் அரசியற் றொண்டு செய்து வந்தோம். மற்றொரு போது இருவரிடையும் அத்துறையிற் கருத்து வேற்றுமை மலையென எழுந்து நிற்கலாயிற்று. அந்நிலையில் இருவரும் சந்திக்க நேர்ந்த போதெல்லாம் ‘மலை’ மறைந்து போகும் எனக் குறிப்பிட்டுள்ளார். இதுதான் பெருந் தன்மை, தமிழ்ப் பண்பாடு, மனிதப் பண்பாடு. இவ்வாறு மனிதப் பண்புக்கு ஊறு நேராவண்ணம் நீயும் பழகு, பகையுணர்வை விடு. ‘பற்றா மாக்கள் தம்முடனாயினும் செற்ற முங்கலாமும் செய்யா’திரு.

கட்டுப்பாடும் அடக்கமும் உடையவனாக இரு என்று மிக மிக வற்புறுத்திக் கூறவிரும்புகிறேன். கட்டுப்பாடில்லாத நூறு மனிதர்கள், கட்டுப்பாடுள்ள ஒரு மனிதனுக்கு ஈடாக மாட்டார்கள் என்று நம் தலைவர்கள் அடிக்கடி சொல்லி வந்துள்ளனர். கட்டுப் பாடிருந்தால் எச்செயலையும் வெற்றியுடன் முடிக்கலாம். எடுத்துக் காட்டாக உன்னையே எடுத்துக் கொள். நீ கட்டுப் பாட்டுடன் இருந்தால் - தேர்வு முடியும் வரை திரைப்படங் களுக்குச் செல்ல மாட்டேன் என்று, உறுதிபூண்டு படித்து வந்தால் கட்டாயம் இறுதித் தேர்வில் முதல்வனாக வெற்றி பெறுவாய். இப்பொழுதே கட்டுப் பாடுடையவனாக இருந்தால், பிற்காலத்தில் நீ வாழ்வுப் பாதையில்