இவ்வாறு எளிய நடையில் தனித்தமிழில் பேச எழுதப் பயிற்சி பெற்று விட்டால் பின்னர் தானாகவே சங்கத்து நடையில் உரை யாசிரியர்கள் எழுதிய நடையில் இன்பங் காண்பாய்; அதில் திளைத்து விடுவாய். எளிய நடைதான் வேண்டுமென்று முன்னோர் நடையைத் தள்ளிவிடாதே. அவ்வின்பம் தனியின்பம். தமிழறிவு பெற்றுவிடின் அது வளர வளர அனைத்து நடையும் இனிமையாகி விடும். உன் அறிவை அளவுகோலாக வைத்துக் கொண்டு சங்கத்து நடையை மதிப்பிடாதே; எள்ளி நகையாடாதே. சங்க நடையை விளங்கிக் கொள்ளச் சற்றே அறிவு வளர்ச்சியும் மொழிப் பயிற்சியும் வேண்டும். அவை பெற்றவர்க்கே அந் நடை இனிமை பயக்கும். பெறார்க்கு சிறிது கடுமையாகத் தான் தோன்றும். விளையாட்டிற் கூடப் பயிற்சி பெற்றவன் தானே வீரனாகத் திகழமுடியும்? பயிற்சியே இல்லான் அந் நடையைக் கடுமையென்பதும் அதற்காக அவற்றை வெறுத்தொதுக்குவதும் தவறு. இக்காலத்திற்கு எளிய நடைவேண்டுமென்று கூறலாமே தவிர பண்டைய நடையை வெறுப்பதும் எள்ளுவதும் ஒதுக்குவதும் அறிவுக்குப் பொருத்த மில்லாத் தவறுடைய செயலேயாகும். தமிழைத்தான் புரியவில்லை யென்று கூறுகிறான். தர்ணா, ஹர்த்தால், கெரோ, ஸ்ட்ரைக், பந்த் இவற்றைப் புரிந்து கொள்ளு கின்றான். வரவேற்கிறான். எப்படிப் புரிந்து கொண்டான், பிற மொழி என்றால் இனிக்கிறது தமிழென்றால் கசக்கிறது. தமிழ் நாட்டில் தான் இந்தக் கொடுமை. இனி நம் ஊர்ப் பெயர்கள் தெருப் பெயர்கள் மக்கள் பெயர்கள் அனைத்தும் தமிழாக்கப்படல் வேண்டும். எங்கோ சிலவிடத்துத் தமிழ்ப் பெயர்கள் காணப்படுகின்றன. அயலவர் ஆட்சி அயன் மொழிப் பற்று இவற்றின் காரணமாகத் தமிழ்ப் பெயர்கள் மாறி விட்டன. மதங்களுக்கு ஆட்பட்டோரும் அவ்வம்மதங்களுக்குரிய மொழிகளால் தம் பெயரை வைத்துக் கொண்டனர். எம்மதத்தின ராகினும் தமிழ்நாட்டிற் பிறந்து வளர்ந்து மடியப் போகிறவர்கள் தமிழிற்றான் பெயர் வைத்துக் கொள்ள வேண்டும். சிற்றூர்களில் வாழ்ந்தோர் நல்ல தமிழ்ப் பெயர்களாக வைத்து வந்தனர். அவர்களையும் புது நாகரிகம் பற்றிக் கொண்டமையால் அவர்களும் பிற மொழிப் பெயருக்கு அடிமையாகினர். பெண் |