82 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11 |
விடலாமா? காரணங் கருதியோ, தேவைகருதியோ இலக்கண விதிகளை மீறலாமே தவிர, மீறுவதையே கொள்கையாகக் கொண்டு விடுதல் கூடாது. புலமையொடு ஒன்றாகக் கலந்து விட்ட இலக்கணம் அவன் பாடல்களிலே தானாக அமைந்து விடும். அவன்தானே கவிஞன்? "காரிகை கற்றுக் கவிபாடுவதினும் பேரிகை கொட்டிப் பிழைப்பது நன்று" என்ற பழமொழியைக் காட்டிப் பாடல் யாக்க யாப்பிலக்கணம் தேவையில்லையென வாதிடுவரும் உளர். மேலோட்டமாக இதனைப் படிப்பவர் அவ்வாறுதான் கூறுவர். அதனுட் பொதிந்து கிடக்கும் கருத்தை அவர்கள் உணராதவரே. கவிதைபாடக் காரிகை கற்க வேண்டுவதில்லை என அவ்வரிகள் கூறவில்லை. வறுமையில் வாடிய புலவன் ஒருவன் கூற்று இது. கவிபாடிப் பிழைப்பதை விடப் பேரிகை கொட்டிப் பிழைப்பது எவ்வளவோ மேல் என்னுங் கருத்தைத்தான் அவன் அவ்வாறு கூறுகின்றான். "அடகெடுவாய் பலதொழிலும் இருக்கக் கல்வி அதிகமென்றே கற்று விட்டோம்" என்று தொடங்கும் பாடலில், 'மோகனமாடக் கழைக் கூத்தாடச் செப்பிடு வித்தை களாடத் தெரிந்தோமில்லையே. வேசையராகப் பிறந்தோ மில்லையே சனியான தமிழை விட்டுத் தையலாரிடமிருந்து தூதுபோய்ப் பிழைத்தோமில்லையே என்ன சென்மம் எடுத்துலகில் உழல் கின்றோமே' என்று வறுமையில் வாடிய புலவன் ஒருவன் பாடு கின்றான். கல்வி மேலானது என்று கற்றுவிட்டோமே என்று கவலைப்படுகிறான். சனியான தமிழ் என்று சாடுகிறான். இதை வைத்துக் கல்வி மேன்மை யுடையதன்று என்றோ, தமிழ் சனியான தென்றோ முடிவுகட்டுதல் கூடாது. தையலார் பால் தூது சென்று பிழைப்பதை ஆதரிக்கின்றான் என்றும் கொள்ளுதல் கூடாது. வறுமையின் கொடுமை மிகுதியால் வேதனைப்பட்டுப் புலம்புவ தாகக் கொள்ளவேண்டும். இவ்வாறு வறுமையில் உழன்றவன் தான் கவிபாடுவதிலும் பேரிகை கொட்டிப் பிழைப்பது நன்று என்று கூறினானே தவிர காரிகை கற்பது கூடாது எனக் கூறவில்லை. |