உயரிய ஆவேசத்தை வாக்கில் நிரந்தரமாக்குவது கவிதை" என்று 'செல்லி' என்பாரும் குறிப்பிடுவதும் அக்கருத்தையே. 'வாக்கில் நிரந்தரமாக்குவது' என்று அவர் குறிப்பிடுவதை நன்கு நினைவில் வைத்துக் கொள். நிரந்தரமாக்குவதென்றால் என்றும் நிலை பேறுடைய - காலத்தை வெல்லும் கவிதையாக்குவது என்பது கருத்து. அத்தகு கவிதை படைப்பது, உணர்ச்சியால் அல்லது வெறியால்- அல்லது ஆவேசத்தால் மட்டுமே இயல்வதாகும். கவிதை விண்ணுலகுக்கு வழிகாட்டுவதுமுண்டு. மண்ணுலக வாழ்க்கைக்கு வழிகாட்டுவதும் உண்டு. நான் முன்பு கூறியதுபோல் கவிஞன் வழிகாட்டியாக இருத்தல் வேண்டும். விண்ணுலக வழிகாட்டிகள் பலர் உள்ளனர். நீ மண்ணுலக வழிகாட்டியாக வேண்டும். மண்ணுலக வழிகாட்டிகள் பலராகப் பெருகல் வேண்டும். 'மாத்யூ ஆர்னால்டு என்பார் 'வாழ்க்கையின் ஆராய்ச்சியே கவிதை' என மொழிந்த அருமைப் பாட்டை மனத்தில் நிலைநிறுத்து. எதை நோக்கினும் ஊடுருவிச் சென்று உண்மை காணும் பார்வை கவிஞனுக்கு வேண்டும். மற்றவர் பார்வைக்கும் கவிஞன் பார்வைக்கும் வேறுபாடு உண்டு. மற்றவர் நோக்கிற்குப் புலனாகாத உண்மை கவிஞன் நோக்கிற்குப் புலனாகும். அதனாலேதான் கவிஞன் ஏனையோரினும் மேம்பட்டவனாக மதிக்கப்படுகிறான். மேற்கூறியவற்றை ஊன்றிப் படித்து அவற்றை மனத்திற் கொண்டு, முறைப்படி கவிதை யெழுதிப் பழகு. உன் தந்தை முடியரசன். |