பக்கம் எண் :

எக்கோவின் காதல்119

விழாக் கொண்டாடு', என்று தன் உள்ள வேதனையை அப்படியே கொட்டிவிட்டான்.

'இதற்காகவா இவ்வளவு பேச வேண்டும்? வேண்டா மென்றால் வேண்டாம். நீங்கள் விரும்பாததை நான் மட்டுங் கொண்டாடவா? இந்தச் சிறு செயலிலே நான் வேறுபட்டால் நான் எப்படித் தமிழ்ப் பெண்களின் புகழை நிலைநாட்ட முடியும்? நானும் போர்க்கோலத் திற்றான் இருக்கிறேன்'- என்று சொல்லிச் சென்றுவிட்டாள்.

அன்று ஒருவருமே பொங்கல் கொண்டாடவில்லை. எப் பொழுதும் போலவே உணவு முறைகள் நடைபெற்றன.

எதையோ எண்ணிக் கொண்டவன் போல விரைவாக மாடியிலிருந்து இறங்கி வந்தான். வந்தவன் ஒரு அறையில் விம்மல் சத்தங்கேட்டு நின்றுவிட்டான்.

'விழாக் கொண்டாடவில்லை யென்று ஒருவேளை மல்லிகா தான் அழுது கொண்டிருக்கிறாளோ' என்று ஐயப்பட்டு மெதுவாகச் சன்னல் வழி உள்ளே கூர்ந்து பார்த்தான். ஓர் இளம் பெண் படுக்கையிற் கிடந்தாள். தலை அவிழ்ந்து கிடந்தது. எளிமையான தோற்றத்தைக் காட்டும் புடவை. நகைகள் இன்றிக் காணப்பட்ட உறுப்புகள்; படுத்த வண்ணமாக விம்மி விம்மி அழுது கொண் டிருந்தாள் அந்தப் பெண். அக்காட்சி அவன் மனத்தை இளக்கி விட்டது. கதவைத் திறந்துகொண்டு தடதடவென்று உள்ளே நுழைந்தான்.

காலடிச் சத்தங்கேட்டுத் திடுக்கிட்டுத் தலையை மட்டும் நிமிர்த்தினாள். செக்கச் சிவந்திருந்த கண்களிலிருந்து சிதறி ஓடின கண்ணீர்த் துளிகள். உதடுகள் படபடத்தன. இதைக் கண்ட எக்கோ, 'நீ யாரம்மா? ஏன் இப்படித் தனித்து அழுது கொண்டிருக்கிறாய்?' என்று கேட்டான்.

'அது என் தலைவிதி' - என்று சொல்லிக் கொண்டே விர்ரென்று வெளியே சென்றுவிட்டாள்.

'விதி! மண்ணாங்கட்டி விதி! விதி, விதி என்று சொல்லித் தானே மக்கள் பாதாளத்தில் அழுத்தப்பட்டுக் கிடக்கிறார்கள். இந்த அறியாமை தொலையும் வரை சேற்றில் நெளிந்து திரியும் புழுவாகத் தான் மக்கள் இருக்க முடியும். எப்பொழுது இவர்கள் விடுதலைப் பறவைகளாகப் பறந்து திரியப் போகிறார்களோ!' என்று தனக்கு தானே நொந்து கொண்டு மறுபடியும் மாடிக்குச் சென்றுவிட்டான்.