பக்கம் எண் :

132கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12

மாடிப்படியில் யாரோ ஏறிவரும் சத்தம் கேட்டது. உற்றுக் கேட்டேன். ஏறி வருஞ் சத்தம் நின்றது. ஆனால் ஒருவரையுமே காணவில்லை. சிறிது நேரத்தில் எனக்குப் பக்கத்தில் ஒருவித சத்தம் கேட்டது. மிகமிகக் கூர்ந்து கேட்டேன். 'உஸ்ஸ்..... உஸ்ஸ்' என்ற சத்தம்.

மனம் படபட என்று அடித்துக் கொண்டது. மூச்சு வெகு வேகமாயிற்று. சத்தம் வந்த பக்கம் மெதுவாகத் தலையைத் திருப்பினேன். ஏதோ வெள்ளையாக ஓர் உருவம் தெரிந்தது. படபடப்பு இன்னும் அதிகமாயிற்று. 'பேயோ' என்று எண்ணி னேன். 'குப்' என்று வியர்த்து விட்டது. வெள்ளை உருவம் வரவரப் பெரிதாகத் தெரிந்தது. அது என்னை நெருங்கி வந்து கொண் டிருந்தது; நெஞ்சம் வெடித்து விடும்போல் இருந்தது. கூச்சல் போட எண்ணினேன். ஆனால் கேலி செய்வார் களே என்று எண்ணிக் கொண்டே எழுந்தேன். தலையணை தொப்பென்று கீழே விழுந்தது. விழுந்தவுடன் 'குடுகுடு' என்று ஓடும் சத்தம் கேட்டது. மறுபடியும் மாடிப் படியில் சத்தம். சே! இனிமேல் இங்கிருப்பது தவறு என்றெண்ணிக் கீழே இறங்கிவந்து திண்ணையில் படுத்துக் கொண்டேன்.

மறுநாட் காலை, 'மாடியில் பேய் நடமாட்டம் இருக்கும் போலிருக்கிறது' என்று அத்தையிடம் சொன்னேன்.

'அத்தான்! அதுதான் பயந்து போய்த் திண்ணையில் படுத்து விட்டீரோ?' என்றான் முருகன்.

'எல்லாம் உனக்கு விளையாட்டுத் தானப்பா, நேரில் பார்த்தேன் - அப்புறமென்ன?'

'எதைப் பார்த்தீர்கள்? பேயையா!'

'ஆமாம்; பேயைத்தான். பன்னிரண்டு மணி இருக்கும். படியில் யாரோ ஏறிவருஞ் சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் பக்கத்தில் 'உஸ்ஸ்.. உஸ்ஸ்' என்று சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். வெள்ளையாக ஓர் உருவம் தெரிந்தது. வரவரப் பெரிதாயிற்று. அதை என் கண்ணாரப் பார்த்தேன். அதன் பிறகு தான் இங்கு வந்து படுத்தேன்!

'அத்தான்! பேயுமில்லை பிசாசுமில்லை; வேறு எதையோ பார்த்து இருட்டிலே பயந்து விட்டீர்கள்!'