142 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12 |
'அவளைத் தானப்பா நானும் சொல்கிறேன். அவள் ஒரு விதவை. அவளுக்கு வயது பதினான்கு. கணவன் இறந்து ஆறுமாதங்கள் தான் ஆகின்றன. எங்கள் சொந்தக்காரப் பெண். போதுமா அவளைப் பற்றிய விளக்கம்'. "என்ன! அவள் விதவையா?" மின்சாரத்தால் தாக்குண்டமைப் போல் என் இதயத்திலிருந்து வெளிவந்தது இந்த வினா! 'ஆம்', ஆழ்ந்த வருத்தத்திலிருந்து மேலெழும்பிய விடை இது. அவள் மீது எனக்கு, நீங்கா அன்பு - காதல் அன்று - ஓர் இரக்க உணர்ச்சி - சகோதர வாஞ்சை என்னையறியாமல் தோன்றியது. எதிரிலிருந்த ஆலயத்தைப் பார்த்தேன். முணுமுணுத்தேன். அந்தோ! என் நாட்டை எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் அங்கு நான் சோகக் காட்சியைத் தானே பார்க்கிறேன். மலர்ந்த தமிழகத்தைக் காணும் நாள் எந்நாளோ? அவள் அன்றலர்ந்த - நுகரப்படாத மலர் எனத் திகழ்கின்றாள். கசங்கிய மலரெனக் கருதி, ஒதுக்கி வைத்து விட்டது. இந்தச் சமுதாயம் என்ற எண்ணத்தோடு வந்த பெருமூச்சு வேலனை என் பக்கம் திருப்பியது. 'வேலா! அவளுக்குப் பெற்றோர்கள் இல்லையா? இச்சிறுவயதில் இந்நிலைக்கு ஏன் ஆளானாள்?' என்று பரிவுடன் கேட்டேன். 'பெற்றோர்கள் உள்ளனர். காதலின் சுவையை நுகர்ந்து கொண்டுதான் இருக்கின்றனர். அந்த நுகர்ச்சியில் இவளைப் பற்றிய நினைவு உண்டாகிறதோ இல்லையோ? உண்டானாலும் 'விதி' அவர்கள் கண்முன் காட்சியளிக்கிறது. அதைப் புறக்கணித்து விட்டு ஏதாவது எண்ணினாலோ சமூகம் தனது கோரப்பல்லைக் காட்டி அச்சுறுத்துகிறது. அவள் சென்ற ஆண்டில் அழகுமிக்க ஓர் இளைஞனுக்கு மனைவியானாள். பொருத்தங்களும் நன்றாக இருக்கின்றன என்று பூசுரரும் கூறினர். இன்பமான வழியிலேயே சென்று கொண் டிருந்தது அவர்கள் வாழ்க்கைச் சகடம். மூன்று மாதத்தில் காய்ச்சலுக்கு ஆளானான் கணவன். சில நாள்களில் மலைக் காய்ச்சலாக மாறியது. அந்த மாற்றம் இவளது மங்கலநாணை - கழுத்திடு கயிற்றை அறுக்கும் வாளாயிற்று. சகடத்தின் ஒரு சக்கரம் நொறுங்கவே அந்தச் சகடம் பயனற்றுப் போயிற்று' என்று கூறி முடித்தான். 'அவள் பெயர் என்ன? |